Friday, April 11, 2008

வட கொரியாவில் அகதித் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்!

ஒரு பெரும் நகரத்தையே இரண்டாக பிரித்த பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரம், கம்யூனிச கிழக்கு பெர்லின் எல்லையில் காவல் கடமையில் இருந்த ஒரு போர் வீரன், தன் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, "சுதந்திர" மேற்கு பெர்லின் நோக்கி ஓடும் காட்சியை எடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது (அல்லது பெற வைக்கப் பட்டது).

அந்தப் படம் தற்போதும், அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளின் சரித்திர நூல்களில் பதிப்பிக்கப் பட்டு, "கம்யூனிச சர்வாதிகாரத்தில்" இருந்து "சுதந்திர மேற்கு" நோக்கி இடம்பெயர்ந்த "வீர மக்கள்" பற்றிய கதைகள், பாடசாலை பிள்ளைகளுக்கு போதிக்கப் படுகின்றது. அதேபோல் கம்யூனிச நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்று கவனமாக இருக்கின்றனர்.

கொரிய போர் முடிந்து, கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (வட கொரியா) உருவான போது, லட்சக் கணக்கான கொரியர்கள், ஜப்பானில் இருந்து போய் குடியேறினர். அதே போலே இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் எல்லையில், காவல் கடமையில் இருந்த சில அமெரிக்க இராணுவ வீரர்களும், வட கொரியா நோக்கி ஓடிப்போய், ராஜ போக வாழ்க்கை வாழ்கின்றனர்.

இவர்களைப் பற்றிய தகவல்களை, அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக வைத்திருந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், ஒரு வயதான அமெரிக்கர், தனது ஜப்பானிய மனைவியுடன் இணையும் நோக்கில் வெளியுலகம் வந்த படியால் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவம், ஊடகங்களில் சர்வதேச செய்தியாகிய பின்னர் தான், இந்த தகவல்கள் உண்மை என்பது உலகிற்கு தெரிந்தது.

அந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்த இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்கள், “Crossing the Line” என்ற பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரித்தனர். ட்றேச்நோக் என்ற அமெரிக்க வீரர், தென் கொரியாவையும், வட கொரியாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டில் கடமையாற்ற பணிக்கப்பட்டவர். தனக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அஞ்சி, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட எல்லையை கடந்து, வட கொரிய சென்று தஞ்சம் கோரும் காட்சியுடன் படம் ஆரம்பமாகின்றது.

ஆரம்பத்தில் அவர் ஓர் அமெரிக்கர் என்பதால், அவரைக் கொலை செய்ய நினைத்த வட கொரியர்கள், பின்னர் மனம் மாறி, தலைநகர் பியங்கியாங்கிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கே நடந்த விசாரணையில், ஒரு சாதாரண போர்வீரர் என்பதை அறிந்து கொண்ட கொரியர்கள், பின்னர் அவரை பிற அமெரிக்க வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

இவரைப் போன்று, நான்கு அமெரிக்கர்கள், வட கொரியாவில் அறிமுகமாகினர். அவர்கள் புகலிடம் கோரிய அந்நிய நாட்டில், பல கலாச்சார சிக்கல்களை எதிர் கொண்டனர். கொரியர்கள் மட்டும் வாழும் அந்த நாட்டில், தாம் அமெரிக்கர்கள் என்பதால் வெறுக்கப் படுவதாக உணர்ந்தனர். அதற்கு முன்னர் நடந்து முடிந்த கொரியப் போரில், அமெரிக்கா குண்டு வீசி, பல பொதுமக்களை கொன்றுள்ளதால், அனைத்து கொரியர்களும் தம்மை வெறுப்பதாக கலாச்சார அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

வட கொரியாவில் இருந்து தப்பிச் செல்வதற்காக, சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரினார்கள். தாம் ஐரோப்பிய இனத்தவர் என்பதால், ரஷ்யர்கள் தம்மை பாதுகாப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரஷ்யர்கள் அவர்களை கொரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள்.

வசமாக மாட்டிக் கொண்ட நான்கு அமெரிக்கர்களும், கொரியர்கள் தம்மை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யபோவதாகஅஞ்சினார்கள். அவர்கள் நினைத்தற்கு மாறாக, கொரியர்கள் அவர்களை அரசியல் பாடசாலைக்கு அனுப்பி, கொரிய சரித்திரம், கலாச்சாரம், சித்தாந்தம் போன்றவற்றை போதித்தார்கள்! அன்றிலிருந்து அந்த நான்கு அமெரிக்கர்களும் வட கொரியாவில் தங்கிவிட தீர்மானித்தார்கள்.

அந்த அமெரிக்கர்கள், கொரியப் பெண்களை மணந்து கொண்டு, அங்கேயே தங்கிவிட்டனர். வட கொரிய அரசு, அவர்களுக்கு வீட்டு வசதிகளை செய்து கொடுத்ததுடன், தன் நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டது. இந்த ஆவணப் படத்தின் நாயகன் ட்றேஸ்நோக், ஒரு ரோமானிய பெண்ணை மணம் முடித்து, இரண்டு ஆண் பிள்ளைகளுடன் அமைதியான குடும்ப வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மகன் தன்னை ஒரு கொரியனாக அடையாளப் படுத்துவதுடன், எதிர்காலத்தில் இராஜ தந்திரியாக பணி புரிய ஆசைப்படுகின்றார்.

ஆவணப் படத்தில் வரும் நான்கு அமெரிக்கர்களில் ஒருவர், கொரியர்களால் கடத்தப்பட்ட ஒரு ஜப்பானிய பெண்மணியை திருமணம் செய்த படியால் தான், இந்தத் தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தன. வட கொரிய உளவாளிகளுக்கு, ஜப்பானிய மொழி சொல்லிக் கொடுக்கும் நோக்கில் கடத்தப்பட்ட அந்தப் பெண்மணி, பின்னர் ஜப்பானிய அரசுடன் செய்து கொள்ளப் பட்ட உடன்படிக்கையின் படி திருப்பி அனுப்பப் பட்டார்.

ஜப்பானிய மனைவியைத் தேடிச் சென்ற அமெரிக்கக் கணவர், ஜப்பானிய பிரதமர் தடுத்தும் கேளாமல், அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். அது பின்னர் உலக செய்தியானது. கைது செய்யப்பட்டவர், அப்போது தன்னை விடுவித்து விடுவார்கள் என்று நினைத்து, வட கொரிய அரசினால் தனக்கு ஆபத்து என்று பொய் சொன்னதாக, இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளார்.

எனது நண்பர் ஒருவருக்கு பழக்கமான ஒரு வட கொரியர், தனது நாட்டில் உள்ள அடக்குமுறைகள் பற்றிக் கூறிய விளக்கங்கள், பலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். கிழமைக்கு நாற்பது மணித்தியாலம் வேலை நேரத்திற்கும் அப்பால், ஒரு நாள் கட்டாய அரசியல் வகுப்பில் பங்கு பற்ற வேண்டும், என்ற நடைமுறை உள்ளதாக தெரிவித்தார்.

சாதாரண தொழிலாளிகள் கூட, அரசியல், சமூகவியல், சரித்திரம் கற்பது ஒரு சிலருக்கு "அடக்குமுறை" போல தெரிகின்றது. சர்வதேச நாடுகளினால் திரிக்கப் பட்ட பொய்கள், தற்போது நம்பகத் தன்மையை இழந்து வருகின்றன.

உண்மையில், வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி இருந்திருந்தால், அந்த அமெரிக்கர்கள் சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரியிருக்க முடியாது. அது மட்டுமல்ல, அவர்களது தப்பி ஓடும் முயற்சிக்காக சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, அவர்களுக்கு அரசியல் பாடம் கற்பித்தவுடன் நில்லாது, திரைப்பட துறையில் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ஆவணப்படம் தயாரித்தவர்கள், “அரசின் பிரச்சாரப் படங்களில் நடித்தீர்களா?" என்று கேட்டதற்கு, ட்றேஸ்நோக் சரியான பதிலடி கொடுத்தார். கொரியாவில் அமெரிக்கா செய்த கொடூரங்கள், ஏற்கனவே ஆவணப் படுத்தப் பட்டுள்ள நிலையில், அதைப் பற்றி படம் தயாரித்தால், அது எப்படி "பிரச்சாரப் படம்" ஆகும்? அப்படிப் பார்த்தால் தற்போது வரும் ஹோலிவூட் படங்கள் பல, அமெரிக்க அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பிரச்சார படங்களாக கருத இடமுண்டு.

தலைநகர் பியங்கியாங்கில் கூட தண்ணீர் தட்டுப்பாடு , மின்சார வெட்டு முதலிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ட்றேஸ்நோக் குடும்பம், இன்று வரை வட கொரியா அரசாங்கத்திற்கு, மறைந்த தலைவர் கிம் உல் சுங்கிற்கு, தனித்துவமான ஜூகே கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதை காட்டுவதுடன் அந்த ஆவணப் படம் முடிகின்றது. நாட்டில் நிலவிய கடுமையான பஞ்சத்தால், லட்சக்கணக்கான மக்கள் மடிந்த போதும், தமக்கு உணவு கிடைத்து வந்ததாக இந்த குடும்பத்தினர் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

அந்தப் ஆவணப் படத்தில், ஒரு குறிப்பிடத் தக்க காட்சி வருகின்றது. பல வட கொரியர்கள் இன்று ஆங்கில பாடம்கற்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இன்றைய தொழில்நுட்பம் பற்றி கற்பதற்கு ஆங்கிலம் அவசியமாகவுள்ளது என்பது தான். நமது மக்களைப் போன்று, “உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஆங்கிலம் படிக்கவில்லை.” கொரிய மக்கள் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை மட்டுமே வெறுக்கின்றனர். அமெரிக்க மக்களையோ, அல்லது ஆங்கில மொழியையோ அவர்கள் வெறுக்கவில்லை என்ற உண்மை படத்தில் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பரப்பி வரும் பொய்களுக்கு, பதிலடி கொடுக்கின்றது. வட கொரியாவில் வாழும் மக்கள், “ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள்” வாழ்வதாக கூறி வந்த பொய்களை இந்தப் படம் உடைக்கின்றது. இதைப் போன்று, டச்சு திரைப்பட துறையினர் தயாரித்த, "வட கொரியாவில் ஒரு நாள்" என்ற படமும், வட கொரியர்கள் பிறரைப் போல சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள் தான் என்று நிரூபித்தது. அது தான் உண்மையும் கூட.

வட கொரியர்களும், பிற நாட்டு மக்களைப் போல, தமது வேலை, குடும்பம், வருமானம் என்று வாழ்பவர்கள் தான். பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர். தாம் வாழ்வது ஒரு சோஷலிச நாடா? அல்லது முதலாளித்துவ நாடா? ஜனநாயக நாடா? என்று கவலைப் படுவதில்லை. இதையே தென் கொரியா வந்து தஞ்சம் கோரும், வட கொரியர்களும் கூறுகின்றனர். தென் கொரியாவில் நடக்கும் பிரச்சாரம், தமது நாட்டின் உண்மை நிலையை கூறுவதில்லை என்று இவர்கள் குறைப்படுகின்றனர். ஜெர்மனியை பின்பற்றி, கொரியாக்களை இணைக்க, பல முயற்சிகள் நடக்கின்றன. .

மேற்குலக ஊடகங்களின் பிரச்சாரம் முழுக்க, பிற தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றியே இருக்கிறது. தமது அரசியல் எதிரிகளை சிறையில் போடும் விடயம், எந்த நாட்டில் இல்லை? அமெரிக்கா தமது அரசியல் எதிரிகளை "குவந்தனமோ" வில் வைத்து சித்திரவதை செய்ததை, மக்கள் அதற்கிடையில் மறந்து விட்டார்களா? வட கொரியாவிலும், அரச எதிரிகள் சிறையில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இருப்பினும், பெரும்பான்மை மக்கள் அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாலேயே, மேற்குலகம் எதிர்பார்க்கும் "புரட்சி" எதுவும் அங்கே நடக்கவில்லை. இந்த விவரணப் படத்தை தயாரித்தவர்கள் கூட, அமெரிக்காவுடன் யுத்தம் வந்தால், வட கொரிய அணு ஆயுதம் பயன் படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்க கூட, வட கொரியா மீது கை வைக்க தயங்குவதற்கு, அணு ஆயுதம் தான் காரணம்.

ஆவணப் படங்களைப் பார்க்க கீழே உள்ள தொடுப்பை அழுத்துங்கள் :





_____________________________________________

கலையகம்

4 comments:

K.R.அதியமான் said...

The few people who crossed over do not tell the true story of N.Korea now. Crazy.

Pls try this objectively :

http://en.wikipedia.org/wiki/Human_rights_in_North_Korea

Living in a paradise called Netheralands is different.

:))))

senthil kumar said...

how did you get these news. really greate

Kalaiyarasan said...

நன்றி, செந்தில் குமார். எனது தேடலின் போது கிடைத்த பலன்.
அதியமானுக்கும் நன்றி. வட கொரியாவிலும் பலர் தஞ்சம் கோரியுள்ளனர் என்ற உண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொண்டமைக்கு.

Unknown said...

பின்னர் ஏன் கலையரசன் ஐரோப்பாவில் தஞ்சம் கோரினார். ...?வடகொரியாவுக்கே சென்றிருக்கலாம். ....?