Saturday, November 15, 2008

ஐரோப்பா: சர்வதேச போர்களின் தொடக்கப்புள்ளி


கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால் அவர்களது தாயக பூமியில் மக்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கையில், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய படைகள் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் குண்டு வீசிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இராணுவ முகாம்கள், தம் நாட்டு சிப்பாய்களை யுத்தகளத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறன. ஆம், ஐரோப்பா போரில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் சாதாரண ஐரோப்பிய பிரசைக்கு இது குறித்து எதுவும் தெரியாது. தமது வீட்டிற்கருகில் குண்டு விழாத வரை, அவர்களுக்கு அக்கறையும் இல்லை.

ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளைப் போல பரம்பரை பகைமை கொண்ட எதிரிகளை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. இந்திய-பாகிஸ்தான் சச்சரவெல்லாம், ஐரோப்பிய குரோதங்களுக்கு முன்னால் ஒன்றுமேயில்லை. இங்கிலாந்தும் பிரான்சும் தொடர்ந்து நூறு ஆண்டுகள் போரில் ஈடுபட்டிருந்தன. நெதர்லாந்து என்பது ஆண்டுகள் யுத்தம் செய்து தான், ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது. ஜெர்மனியும், பிரான்சும் இரண்டாம் உலகப் போரின் முடிவு வரை, ஒருவர் மற்றவரை கண்டால் கொன்று தின்னுமளவு வன்மம் கொண்டிருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் (முதலாம் உலகப்போரை போலவே அதுவும் ஐரோப்பிய நாடுகளின் போர் தான்) முடிவுற்றதும், பழைய ஐரோப்பா மறைந்து, புதிய ஐரோப்பா உதயமாகியது. தமது பகைமையை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்வை, எல்லாவற்றையும் மறந்து விட்டு, இணைபிரியாத் தோழர்களாக தழுவிக்கொண்டனர். தமக்குள் இனிமேல் சண்டையிடுவதில்லை, என்று முடிவெடுத்துக் கொண்டனர். அன்று ஏற்பட்ட வரலாறு காணாத நட்பு, இன்று ஐரோப்பிய யூனியன் வரை வளர்ந்துள்ளது என்பதை நம்புவது கஷ்டம் தான். ஆனால் பகைவர்கள் நண்பர்களான அதிசயம் சாத்தியமாகியுள்ளது

ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிடுவதில்லை, ஒருவரை ஒருவர் கொல்வதில்லை என்று "நாகரீகத்தின் உச்சத்தை" தொட்டாலும், அவர்கள் காந்தியின் புதல்வர்களாக மாறிவிடவில்லை. தமது யுத்தங்களை, காலனிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்ற, மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பிரான்ஸ் இப்போதும் முன்னாள் காலனி நாடுகளில் இராணுவ முகாம்களை பராமரிக்கின்றது. அதெல்லாம் தனது நலன்களுக்காகத் தான், என்று பிரான்ஸ் ஒத்துக் கொள்கின்றது. நாசிச கடந்த காலம் காரணமாக சொந்தமாக இராணுவம் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்ட ஜெர்மனி, இன்று தனக்கென்று நவீன இராணுவத்தை கொண்டிருப்பது மட்டுமல்ல, "ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளி" பிரான்சுடன் சேர்ந்து, வெளிநாடுகளுக்கும் படைகளை அனுப்பியது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு, பெர்லின் வரை வந்த சோவியத் செம்படைகள், ஐரோப்பா முழுவதும் ஆக்கிரமிக்கப் போகின்றன, என்ற வதந்தியை கிளப்பி விட்ட அமெரிக்கா, சமயோசிதமாக "வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு"(NATO) என்ற இராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. ஐரோப்பியர்களும், கடல்கடந்து வந்த அமெரிக்கா மைத்துனர்களுடன் சேர்ந்து கொண்டு, இராணுவ சாகசங்களை தொடர கிடைத்த சந்தர்ப்பத்தை, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். இந்த வரலாற்றை புரிந்து கொண்டோருக்கு, தற்போது ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஐரோப்பிய படைகள் நிலை கொண்டுள்ள யதார்த்தம் வியப்பளிக்காது.

ஐரோப்பிய ஒத்துழைப்பு மட்டும் இல்லாவிட்டால், அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் படை நகர்வுகளை மேற்கொள்ள சிரமப்பட்டிருக்கும். ஜேர்மனி, ஹைடெல்பேர்க்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கா இராணுவ முகாம் தான், மத்திய கிழக்கிற்கான விநியோகத்தை கவனிக்கின்றது. தனது இராணுவ விமானப் போக்குவரத்தை காரணமாக காட்டி, அருகில் இருக்கும் பிராங்க்பெர்ட் சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகின்றது. கடல்வழிப் போக்குவரத்திற்கு பெல்ஜியத்தின் அன்த்வேர்ப் துறைமுகம் பயன்படுத்தப் படுகின்றது.

நேட்டோ பதாகையின் கீழ், அமெரிக்க படைகளுடன் கூட்டுசேர்ந்து செயல்படும் ஜெர்மன் படைகளை (பெர்லின் அருகில்) பொட்ஸ்டமில் உள்ள கொமாண்டோ தலைமையகம்(Einsatzführungskommando) நெறிப்படுத்துகின்றது. இதைவிட ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பூகில் (பிரான்ஸ்) வருங்கால ஐரோப்பிய இராணுவ தலைமையகம் (Eurocorp) உள்ளது. அனேகமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் படைகளை இனிமேல் இது நிர்வகிக்கும்.

சர்வதேச போர்களில் ஐரோப்பாவின் பங்களிப்பை அம்பலப்படுத்தும் நோக்கில், சில சமாதான ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெல்ஜியத்தில் கடந்த 14 நவம்பர் சர்வதேச போர் எதிர்ப்பு தினமாக அறிவித்து விட்டு, சில ஆர்வலர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னால் தமது எதிர்ப்பை காட்டினர். நுழைவாயில் முன்பு "போர் அமைச்சு" என்ற அட்டையை மாட்டினர். சுவரில் இரத்தத்தை உவமைப்படுத்த சிவப்பு சாயம் பூசினர். "போர் இங்கே தொடங்குகிறது, இங்கேயே முடியட்டும்" என்ற சுலோகம் பொறித்த பதாகையை கட்டினர். சிறிது நேரத்தில் போலிஸ் வந்து ஆர்வலர்களை கைது செய்து கொண்டு சென்றாலும், அவர்களது போராட்டம் வீதியால் சென்ற பலரது கவனத்தை ஈர்த்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு :
European day of action against military infrastructure

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

No comments: