Thursday, January 15, 2009

நிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது


சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த லாட்வியாவில், பொருளாதார பிரச்சினை காரணமாக கிளர்ந்தெழுந்த மக்களின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. தலைநகர் ரீகாவில், 13 ஜனவரி அன்று 10000 ற்கும் அதிகமான மக்கள் திரண்டு அரசுக்கெதிரான தமது வெறுப்பை வெளிக்காட்டினர். பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படும், ஆளும் வலதுசாரி கட்சியை பதவி விலகக் கோரினர். பேரணியை தடுக்க முயன்ற கலகத்தடுப்பு பொலிஸ் மீது சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசியதால் அங்கே கலகம் வெடித்தது. பொலிஸ் வாகனங்கள், அரச அலுவலகங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய, நேட்டோ அலுவலகங்களும் கலகக்காரரின் கல்வீச்சுக்கு தப்பவில்லை. சில வர்த்தக நிலையங்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டதாக தெரியவருகின்றது. கலவரத்தில் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர், 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் உலக பொருளாதார நெருக்கடியால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் லாட்வியாவும் ஒன்று. அந்த நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி நெருக்கடியில் சிக்கியதால், வங்கிகள் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன. இதனால் கடன்பெற முடியாத விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்து வந்த லாட்விய பொருளாதாரம், கடந்த வருடம் சுருங்க ஆரம்பித்தது. பணவீக்கமும் அதிகரித்தது. அரசு ஐ.எம்.எப். விதிக்கும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து, பொருளாதார சீர்திருத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த சீர்திருத்தத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் தான் தற்போது கிளர்ந்தெழுந்து உள்ளனர்.

1991 ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து லாட்வியா சுதந்திரமடைந்த பின்னர், (சோஷலிசத்தை கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கு மாறிய பின்னர்), இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்ட பேரணி இதுவாகும். இதே நேரம், அடுத்த நாள் (13 ஜனவரி) பல்கேரியாவிலும் விவசாயிகள், மாணவர்கள், வேலையற்றவர்களின் பேரணி ஒன்று கலவரத்தில் முடிந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் மிக வறிய நாடான பல்கேரியாவில், அரசாங்கத்தில் நிலவும் ஊழலையும், ஏழ்மை வாழ்வையும் இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் இம்மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். கடந்த மாதம் கிரீஸ் மக்கள், இதே காரணங்களுக்காக வாரக்கணக்காக அரச எதிர்ப்பு கலகத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.]

மேலதிக தகவல்களுக்கு:
Latvia Shaken by Riots Over Economy
Bulgaria anti-government protest turns into riot

Anti-government riots in Riga, Latvia


No comments: