Friday, January 16, 2009

பொலிவிய அரசு கடவுளை தூக்கி வீசப்போகிறதா?


பொலிவியாவில் அரசையும், மதத்தையும் பிரிக்கும் சட்டத்திருத்தம் ஜனவரி 25 ம் திகதி மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட உள்ளது. கடவுளின் பூலோக பிரதிநிதிகளாக கருதிக்கொள்ளும், கத்தோலிக்க மதகுருக்களும், வலதுசாரி கட்சிகளும் இப்போதே அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கி விட்டன. "உங்களுக்கு தெரியுமா? பொலிவியாவில் இருந்து கடவுளை தூக்கி வீசப் போகிறார்கள்." இவ்வாறு எதிர்க்கட்சி ஆதிக்கத்தில் உள்ள தொலைக்காட்சி, மதநம்பிக்கையாளர்களை பயமுறுத்துகின்றது. "கடவுளுக்கே உங்கள் வாக்கு. புதிய அரசியல்நிர்ணய சட்டத்தை நிராகரியுங்கள்." இவ்வாறு ஐக்கிய தேவாலயங்களின் கூட்டமைப்பு, விளம்பரங்கள் மூலம் பரப்புரை செய்கின்றது. வலதுசாரி எதிர்க்கட்சியான Podemos இந்த கூட்டமைப்பில் கைகோர்த்துள்ளது. நீண்டகாலமாக சோஷலிச ஜனாதிபதி ஏவோ மொராலசுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் நல்லுறவு இல்லை. அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும், வலதுசாரி கட்சிகளின் கோட்டையான சாந்த குரூஸ் மாநிலத்திற்கு கத்தோலிக்க மதகுருக்கள் ஆதரவு அளித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பொலிவியாவில் ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கத்தோலிக்க மதம், 19 ம் நூற்றாண்டு வரை ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக கோலோச்சியது. கடைசியாக எடுத்த மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 56% கத்தோலிக்கராகவும், 36% புரட்டஸ்தாந்து அல்லது பிற கிறிஸ்தவ சபைகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். தற்போதுள்ள அரசியல்நிர்ணய சட்டத்தின் 3 வது அலகு, கத்தோலிக்க கிறிஸ்தவத்தை அரசமதமாக அங்கீகரித்துள்ளது. அரசிற்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவு, இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவரை காலமும் அனைத்து தேசிய, சமய விசேட தினங்களில், அரசியல் தலைவர்கள் மத அனுஷ்டானங்களில் பங்குபற்றி வந்தனர். ஆனால் புதிதாக வரவிருக்கும், 4 வது திருத்தச் சட்டத்தின் படி, "அரசானது மதத்தில் தங்கி இருக்கவில்லை. அதேநேரம் மத நிறுவனத்தின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றது." அனேகமாக மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இந்த சட்டத்தை முன்மொழிந்த ஆளும் "சோஷலிசத்திற்கான இயக்கம்", நாஸ்திகத்தை முன்னிலைப்படுத்தவும் இல்லை. அதேநேரம் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கவுமில்லை.

மேலதிக விபரங்களுக்கு:
Bolivian Constitutional Referendum Analysis: An Overview

No comments: