Sunday, May 03, 2009

இலங்கை இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்

இலங்கையின் இனப்பிரச்சினை வரலாறு குறித்த ஆய்வாக "புதிய பூமி" பத்திரிகையில் இமயரவரம்பன் எழுதிவரும் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதியை இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.

இனத்துவ அரசியலின் தொடக்கங்கள்

இமயவரம்பன்
அன்றைய தேசிய அரசியல் உருவாக்கத்திற் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழருஞ் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமுஞ் சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதைக் கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள் தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவு படுத்துகிற சூழ் நிலை ஏற்பட்ட போது அவ் விரிவாக்கத்திற் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன.

தொழிலாளி வர்க்க உணர்வு தானாகவே சமூக நீதிக்கும் சமூக மாற்றத்திற்குமான அரசியலாக வேண்டியதில்லை. அதை இயலுமாக்க வர்க்க உணர்வு வர்க்கச் சிந்தனையாக விருத்தி பெற வேண்டும். அதை விடத், தொழில் வளர்ச்சி பின்தங்கிய கொலனிய நாடுகளில் நவீன உற்பத்தியுடன் பழக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் சிறுபான்மையாகவே இருந்தது. இலங்கையின் தோட்டத் தொழிலாளர் போல மிகவும் பின்தங்கிய பொருளியல் நிலைக்கு உட்பட்ட உழைப்பாளிகள் சமூகத்தின் உற்பத்தி உறவுகள், பொருளியலில் முதலாளிய முறையில், அதாவது உழைப்பாற்றலுக்குரிய ஊதியம், என்று இருந்தாலும், பெருந்தோட்டத் துறையின் நிருவாக அதிகாரக் கட்டமைப்பில் நிலவுடைமைச் சமுதாயப் பண்புகள் கணிசமான பங்கு வகித்தன. தோட்டத் தொழிலாளர் தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கொத்தடிமைகளாகவே நடத்தப் பட்டனர். அதற்கமையக் கங்காணி முறை சாதி ஏற்றத் தாழ்வுகள், நிலவுடைமைச் சமூகத்திற்குரிய எசமான விசுவாசம் போன்ற பண்புகளும் சேர்ந்து மலையகத் தொழிலாளர் போராட்டச் சக்தியாக வளரத் தடையாய் இருந்தன.

எனவே தொழிலாளர் இயக்கம் விருத்தி பெற்று வந்த போதும் அதனாற் தொழிற் சங்க அரசியலின் வரையறைகட்கு அப்பால், வர்க்கப் போராட்ட அரசியலாக, அரசியல் அதிகாரத்திற்கான எழுச்சியை நோக்கி வளரக் கூடிய சூழல் உருவாகி இருக்கவில்லை. அதை இயலுமாக்கக் கூடிய அரசியற் சிந்தனை வேர் கொள்ளத் தொடங்கவும் இல்லை.

எழுச்சி பெற்று வந்த நிலவுடைமை முதலாளி வர்க்கம் தனது நலன்களைப் பேணுவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தது. தென்னாசிய நிலவுடைமைச் சமுதாயத்தின் ஒரு முக்கியமான கூறாக இருந்து வந்த சாதி, தேசிய உணர்வின் விருத்திக்கும் தடையாகவே இருந்தது. சாதிகளாகத் தனித்தனியே அடையாளப் பட்டிருந்த சிங்களச் சமூகத்தினரிடையே கொவிகம (வேளாளரை ஒத்த சாதியினர்) கராவே (கரையார் சமூகத்தை ஒத்த சாதியினர்) சாதிகளிடையே சட்டவாக்கற் சபையில் இடம் பிடிப்பதற்கான போட்டி உருவானதற்குக் காரணம், கராவே சமூகத்தினரிடையே வணிகத் துறையில் பணஞ் சம்பாதித்த ஒரு முதலாளி வர்க்கமும் தமக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பைப் பயன் படுத்திச் சட்டம், மருத்துவம் போன்ற துறைகளில் முன்னுக்கு வந்தவர்களின் உருவாக்கமும் எனலாம். எனவே அவர்கள் தங்களைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாகக் கொலனி ஆட்சி ஏற்க வேண்டும் என்பதில் மட்டும் இல்லாமல் தாங்கள் கொவிகம சாதியினரை விட உயர்வானவர்கள் என்று வற்புறுத்துவதிலும் முனைப்பாக இருந்தனர்.

இதைவிடக் கண்டிய அதாவது மலை நாட்டுச் சிங்களவர் இடையே இருந்த அதி உயர் வர்க்கத்தினர். கண்டி இராச்சியத்தின் மந்திரி பிரதானிகளதும் பிரதேச அதிகாரிகளதும் வம்சத்தினராகக் கருதப் பட்டவர்கள். அவர்கள் தம்மை 'ரதல" என்று அழைத்துக் கொண்டனர். அவர்களே பழைய கண்டி இராச்சியப் பகுதியின் பெரும் நிலவுடைமை யாளர்களாகவும் பெரிய பவுத்த கோவில்களின் அறங்காவலர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களது சிந்தனையின் பாதிப்பு கண்டிய உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே வலுவாக இருந்தது. ஒரு புறம் கரையோரப் பகுதிகளை விடப் பின்தங்கிய நிலையிலேயே கண்டியக் கிராமிய சமூகம் இருந்தது. மறுபுறம் கண்டிய மேட்டுக் குடியினர் தம்மை ஆங்கிலேயருக்கு அடுத்த படியில் இருந்தோராகக் கருதினர். எனவே கொவிகம சமூகத்தினர் இடையிலும் கண்டியச் சிங்களவர் - கரையோரச் சிங்களவர் என்ற பாகுபாடு வலுவாகவே இருந்தது.

சனத்தொகைக் கணிப்பீடுகளில் கண்டியச் சிங்களவரையும் கரையோரச் சிங்களவரையும் வௌ;வேறாகக் கணக்கிடும் வழமை இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரே, சிங்களத் தேசியவாதம் வலுப்பெற்ற நிலையிலேயே முற்றாகக் கைவிடப் பட்டது. எவ்வாறாயினும் கரையோரப் பகுதியிலும் கண்டி இராச்சியத்தை அண்டிய ஆனால் கொலனிய ஆட்சிக்கு உட்பட்ட மேல் மாகாணப் பகுதிகளிலும் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் நல்லுறவு பூண்டதன் மூலம் பட்டம் பதவிகளும் காணி பூமியும் வீடுவளவுகளும் பெற்றுத் தம்மை மேம்படுத்திக் கொண்ட கொவிகம குடும்பங்கள் இருந்தன. இவர்களிற் கணிசமான பகுதியினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள். கண்டிய உயர் சாதிக் குடும்பங்கள் இவர்களது பொருளாதார மேம்பாடு கருதித் தேவையான போது மதம் என்ற அடையாள வேறுபாட்டையும் புறக்கணித்துத் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்வாறு நடக்கத் தொடங்கியது. எனினுஞ் சாதி என்ற அடையாளம் வலுவாகவே இருந்தது.

கிறிஸ்துவ மதத்தைத் தழுவாத உயர் வகுப்பினர்கள் கூடத் தங்களுக்குக் கிறிஸ்துவ அடையாளத்தைத் தரக் கூடிய பேர்களைச் சூட்டிக் கொண்டனர். உதாரணமாக டொன் ஸ்ற்றீபன் சேனநாயக்க, பிலிப் குணவர்த்தன. ஆகியோர் கிறிஸ்த்துவர்கள் அல்லர். இந்த விதமான போக்கு சில பிரதேசங்களிற் குறைவாகக் காணப்பட்டதன் காரணம் அப் பிரதேசங்களில் கொலனிய நிருவாகமும் கிறிஸ்துவ நிறுவனங்களும் தீவிரமாகச் செயற் பட்டமை எனலாம்.

தமிழரிடையேயும் சாதி வேறுபாடுகளும் பிரதேச வேறுபாடுகளும் வலுவாக இருந்தன. யாழ்ப்பாணத்திற் தமது பாரம்பரியத்தையும் கொழும்பிற் தமது தொழில்களையும் கொண்டிருந்த வசதி படைத்த யாழ்ப்பாணச் சைவ வேளாளரே அரசியலிலும் வட புலத்துச் சொத்துடைமையிலும் கல்வி, உத்தியோகங்களிலும் ஆதிக்கஞ் செலுத்தினர். இடை நிலைச் சாதியினரிற் சிலர் தனிப்பட்ட முறையில் சமூக மேம்பாடு எய்தினாலும், வேளாள மேட்டுக் குடிகளது நிலஞ் சார்ந்த பொருளாதார ஆதிக்கத்தின் பின்னணியிலும் ஏற்கெனவே கல்வியிலும் உத்தியோகத்திலும் அவர்கள் பெற்றிருந்த முதனிலையின் காரணத்தாலும் அரசியலில் அவர்கட்குச் சவாலாக எழ வாய்ப்பு இருக்கவில்லை. கரையார் சமூகத்தினர் நேரடியான வேளாள ஆதிக்கத்திற்கு உட்படாதும் அவர்களை ஆதிக்கத்திற்கு உட்படுத்தத் தேவையற்றும் இருந்தாலும்; தென் இலங்கையின் கராவே சமூகத்தின் அளவுக்குச் சமூக மேம்பாடு பெற்றிருக்கவில்லை.

கிழக்கு மாகாணத்திலும் வடமேல் மாகாணத்தின் கரையோரப் பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ச் சமூகங்களது வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்துச் சூழலை விடக் கனிவான இயற்கை வளங்களின் காரணமாகக் ஆங்கிலக் கல்வி, உத்தியோகம் என்பனவற்றுக்கான தேவையைக் கொண்டிருக்கவில்லை. அதை விடவும் வட புலத்தில் மதமாற்ற நோக்கத்துடன் கிறிஸ்துவ மி~னரிகள் பெருமளவிற் பாடசாலைகளை நிறுவுதற்கு ஏதுவாக இருந்த வரலாற்றுப் பின்னணி இலங்கையில் வேறெங்கும் இருக்கவும் இல்லை. எனவே அரசியல் செயற்பாடு வடபுலத்தைப் பகைப்புலமாகவும் கொழும்பைத் தளமாகவுங் கொண்டு உருவான சமூக அரசியற் செல்வாக்குடைய குடும்பங்கள் இப் பகுதிகளில் உருவாக வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. இப் பகுதிகளிற,; குறிப்பாகக் கிழக்கிற், கல்வி, அரசாங்க உத்தியோகங்கள் என்பன கொலனி ஆட்சியின் பிற் பகுதியில் விரிவாக்கம் பெறத் தொடங்கிய போது அப் பணிகளைச் செய்ய வட புலத்திலிருந்தே ஆசிரியர்களும் அலுவலர்களும் வரவேண்டி இருந்ததைப் பலரும் அறிவோம்.

மலையகத் தமிழரைப் பொறுத்தவரை, பெருந்தோட்ட நிறுவனம் ஏகப் பெரும்பான்மையானோரைப் பொருளியல், கல்வி, அரசியல் விழிப்பு என்ற விடயங்களில் திட்டமிட்டே தாழ்நிலையில் வைத்திருந்தது. தோட்டப் பொருளாதாரத்தை அண்டி உருவான வணிகர்களும் தோட்ட முதலாளிமாரைச் சார்ந்து நின்று தம்மை மேம்படுத்திக் கொண்டவர்களும் மலையகத் தமிழ்ச் சமூக மேம்பாடு பற்றி அக்கறை காட்டியதாகக் கூறுவது கடினம். அவர்கட்காகக் குரல் கொடுத்த முக்கியமான பிரமுகர்களில் ஒருவர் பொன்னம்பலம் அருணாசலம். அடுத்தவரும் அதி முக்கியமானவரும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவரான நடேசய்யர். மலையகத்திற்கான ஒரு சமூக அடையாளத்துடன் கூடிய அரசியல் உருவாகக் கூடிய கால மெடுத்தது போக அது முழுமை பெறுவதற்குள் பேரினவாதக் குறுக்கீடுகளும் வந்து விட்டன.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, வடக்கில் அவர்கள் மிகச் சிறுபான்மையினரையும் தம்மைத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியினராகக் கொண்டும் வாழக் கூடிய ஒரு சூழல் இருந்தது. கிழக்கில் அவர்களது தனித்துவத்தை வலியுறுத்தக் கூடியளவு எண்ணிக்கையும் முஸ்லிம் சனத்தொகை அடர்வுடைய பகுதிகளும் இருந்தன. எனினும் கல்வி, உத்தியோகம் போன்ற துறைகளில் அவர்கள் கிழக்கு மாகாணத் தமிழரை விடவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தனர். தென் இலங்கையிலும், கொழும்பு தவிர்ந்த பகுதிகளில், கல்வி, உத்தி யோகம் போன்ற அக்கறைகள் குறைவாகவே இருந்தன. எவ்வாறாயினும் நகர் சார்ந்து, குறிப்பாகக் கொழும்பை அண்டிச், செல்வந்த முஸ்லிம் வணிகக் குடும்பங்கள் பல உத்தியோகம் போன்ற அக்கறைகள் குறைவாகவே இருந்தது. எவ்வாறாயினும் நகர் சார்ந்து, குறிப்பாகக் கொழும்பை அண்டிச் செல்வந்த முஸ்லீம் வணிகக் குடும்பங்கள் பல உருவாகி இருந்தன. சோனகர் எனப்பட்ட முஸ்லீம்கள் இலங்கை இந்தியச் சோனகர் என வகுக்கப் பட்டனர். இலங்கை முஸ்லீம் சமூகத்தினர் இடையிலிருந்து அனைத்து இலங்கை முஸ்லீம்களதும் பேரிற் பேசக் கூடிய தலைவர்கள் உருவானார்கள். அவர்களைவிட எண்ணிக்கையிற் குறைவாக இருந்த போதும், கணிசமான கல்வி, தொழில் ஈடுபாடுடைய மலாய்ச் சமூகத்தினர் மத்தியிலிருந்தும் முஸ்லிம்கட்காகவும் மலாய்ச் சமூகத்தினருக்காகவும் பேசக் கூடிய தலைவர்கள் தோன்றினர். எனினும் முஸ்லிம் சமூகம் மேற் கூறிய இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர், மலாயர் என்கிற மூன்று பிரிவுகட்கும் அப்பால் வேறு அடையாளங்களின் அடிப்படையிலும் வெவ்வேறு சமூகப் பிரிவுகளாகவே இயங்கியது. பறங்கியரிடையே இருந்து முக்கியமான சமூகப் பிரமுகர்கள் தோன்றினாலும் அச் சமூகத்தின் அடையாளத்தின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்த கூடிய தொகையில் அவர்கள் இருக்கவில்லை. அதை விட, அவர்களது ஐரோப்பியப் பின்புலம் காரணமாக, சிறப்பான சில விதி விலக்குக்கள் போக, அவர்களது தலைவவர்கள் கொலனிய நிருவாகத்திற்கு நெருக்கமாகவே இருந்தனர்;.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் இன அடையாளத்தை வற்புறுத்துகிற போக்குகளும் இனத்தோடு மதத்தைச் சேர்த்து வற்புறுத்துகிற போக்குக்களும் நிலை கொண்டு விட்டாலும் அன்றைய தேசிய அரசியல் உருவாக்கத்தின் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழருஞ் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமும், அதே அளவு அல்லது அதைவிட முக்கியமாகச், சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதைக் கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள் தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவு படுத்துகிற சூழ் நிலை ஏற்பட்ட போது அவ் விரிவாக்கத்திற் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன.



(நன்றி: "புதிய பூமி", டிசம்பர் 2007)

Puthiya Poomi
S-47, 3rd Floor
C.C.S.M.Complex
Colombo -11
SriLanka

E-mail: nfo@ndpsl.org

No comments: