Wednesday, October 27, 2010

பல்லினக் கலாச்சார ஜெர்மனியின் மறைவு

ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல் சமீபத்தில் வெளிநாட்டவர் பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகின. அது வரை காலமும், தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் மட்டுமே கூறி வந்த சொற்கள், ஒரு தேசத்தின் அதிபரின் வாயில் இருந்து உதிர்ந்தன. அக்டோபர் 16 அன்று, CDU கட்சியின் இளைஞர் அணியின் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே, அவர் அந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். "ஜெர்மனியில் பல்லினக் கலாச்சார சமூக அமைப்பு தோல்வியடைந்து விட்டது." இன்னும் ஒரு படி மேலே சென்று, "கீழைத்தேச பிற்போக்கு கலாச்சாரங்களை கொண்ட மக்கள், உயர்ந்த மேலைத்தேய நாகரீகத்திற்கு மாற வேண்டும்." என்று கூறியிருப்பார். ஆனால் அப்படியான கூற்றுகள், அவரை இன்னொரு ஜெர்மன் பேரினவாதியாக இனங்காட்டியிருக்கும். நல்ல வேளை அதனோடு நிறுத்திக் கொண்டார். ஹிட்லர் காலத்தில் இருந்து இன்று வரை, ஜெர்மன் கலாச்சாரம், மரபு, பாரம்பரியம் இவற்றை கட்டிக்காப்பதிலேயே குறியாக கொண்ட மலைவாழ் மக்களைக் கொண்ட பவாரியா மாநிலத்திலே அந்த வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த உரை இடம்பெற்றது. அன்று சமூகமளித்த பவாரியா மாநில முதல்வர் Horst Seehofer "ஜெர்மனி தனது ஆதிக்க கலாச்சாரத்திற்கு விசுவாசமாக இருக்கும். பல்லினக் கலாச்சாரத்தை எதிர்க்கும்." என்றார். காத்திருக்கும் ஆபத்துகளுக்கு கட்டியம் கூறுவது போல அமைந்தது அந்த உரை.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் அவமானகரமான தோல்விக்குப் பின்னர், ஜெர்மன் ஆதிக்கக் கலாச்சாரம் குறித்து பேசுவது தவிர்க்கப்பட்டது. புதிய ஜெர்மன் அரசு, நாசிஸ காலத்து குற்றவுணர்ச்சியை மறைப்பதற்காக, ஜெர்மனி ஒரு பல்லினக் கலாச்சார நாடு என்ற பிம்பத்தை ஏற்படுத்த பாடுபட்டது. உண்மையில் அயலில் இருந்த நாடுகளை விட மேற்கு ஜெர்மனி, பல்லினக் கலாச்சாரங்களை கொண்ட மக்களை உள்வாங்கிக் கொண்டது. கலாச்சார விழாக்கள், பிற மதங்களுக்கான வழிபாட்டு சுதந்திரம் என்பன, தாராளமாக அனுமதிக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஹம் என்ற நகரத்தில் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயிலுக்கு சென்றால், ஒரு யாழ்ப்பாணக் கோயிலுக்கு சென்ற உணர்வு ஏற்படும். வருடாந்த திருவிழாவின் போது, பிரதான வீதி வழியாக தேர் இழுத்து செல்லும் கண்கொள்ளாக் காட்சியையும் காணலாம். ஜெர்மன் முழுவதும் இந்துக் கோயில்களுக்கு மட்டுமல்ல, நூற்றுக் கணக்கான மசூதிகளுக்கும் அரசு மானியம் கொடுக்கின்றது. இதெல்லாம் மேலைத்தேய கனவான்களின் தாராள மனப்பான்மையைக் காட்டுகின்றது என்று நீங்கள் கருதினால், அது உங்கள் தவறு.

"Multiculti" என்று ஜெர்மனியர்கள் செல்லமாக அழைக்கும் பல்லினக் கலாச்சார சமூகம், துர்க்கியரின் வருகையுடன் தோற்றம் பெற்றது. போரில் அழிவுற்ற ஜெர்மனியை மீளக் கட்டியெழுப்ப துருக்கியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டனர். வளைகுடா நாடுகளில் தெற்காசிய தொழிலாளர்கள் தேவைப்பட்டது போன்ற சூழ்நிலை அது. ஆரம்பத்தில் வளகுடா நாடுகளில் இருந்த நிலைமையைப் போன்றே ஜெர்மனியிலும் காணப்பட்டது. வேலைக்கு வருபவர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டிலேயே குடும்பத்துடன் தங்கி விடுவார்கள், என்று யாரும் நினைக்கவில்லை. ஜெர்மன் அரசும், அவர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளும், மக்களும் அன்று இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. பொதுவாகவே, வேலைக்கு போய் வந்து முகாம்களில் முடங்கிக் கொள்ளும் அந்நிய தொழிலாளர்கள், ஜெர்மன் மக்களுடன் சேராமால் தாமரையிலைத் தண்ணீர் போல வாழ்ந்து வந்தனர்.

துருக்கியர்கள் மட்டும் ஜெர்மனிக்கு கட்டுமானப் பணிகளுக்காக கொண்டு வரப்படவில்லை. இத்தாலி, ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களும் வந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட காலம் சம்பாதித்து விட்டு அவர்கள் எல்லாம் தமது நாடுகளுக்கு திரும்பி விட்டனர். ஐரோப்பிய பொருளாதார ஒருங்கிணைப்பு காரணமாக, அவர்களின் நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்தது. அதனால் அந்நிய தேசத்தில் காலம் தள்ளுவதை விட, சொந்த தாயகம் திரும்புவதே மேல் எனத் தீர்மானித்து விட்டனர். ஆனால் துருக்கியில் மட்டும் நிலைமை மாறவேயில்லை. அது ஒரு வறிய நாடாகவே தொடர்ந்திருந்தது. ஐரோப்பிய கூட்டமைப்புடனும் சேர்க்கப்படவில்லை. இது போன்ற சாதக, பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த துருக்கியர்கள் ஜெர்மனியிலேயே தங்கி விட விரும்பினார்கள். ஜெர்மன் அரசும் தவிர்க்கவியலாது, குடும்ப ஒருங்கிணைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த சில மாதங்களிலேயே, மேற்கு ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை உணரப்பட்டது. ஆரம்பத்தில் கிழக்கு ஜெர்மனியில் இருந்து அகதிகளாக வருபவர்களைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்ப எண்ணினார்கள். அதே நேரம் அயலில் இருந்த சோஷலிச நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருவார்கள் என்று காத்திருந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் அகதிகள் வரவில்லை. எல்லைப்படையினரின் கடுமையான கண்காணிப்பு மாத்திரமல்ல, கிழக்கு ஜெர்மனி உட்பட, சோஷலிச நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் அதற்கு காரணம். இருப்பினும் அதிகளவு சலுகைகளை வழங்கும் அகதிச் சட்டங்களை ஜெர்மன் அரசு திருத்தவில்லை. காரணம்: நாசிஸ கால குற்றங்களுக்காக வெட்கப்பட்டு, உலகில் நல்ல பேர் எடுப்பதற்காகவே அத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டன. 1980 ம் ஆண்டு, ஜெர்மனியர்கள் சிறிதும் எதிர்பாராத அகதிகள் வந்தார்கள். துருக்கியில் ஏற்பட்ட இராணுவ சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அவர்களைத் தொடர்ந்து 1983 கறுப்பு ஜூலை இனக் கலவரம் காரணமாக, பெருந்தொகை ஈழத்தமிழர்கள் வந்து சேர்ந்தார்கள். இவர்களைத் தவிர வேறு பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் அகதி தஞ்சம் கோரினார்கள்.

அநேகமாக ஐரோப்பிய தொழிலாளர் சமூகத்தினர், ஜெர்மன் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்து வந்த அகதிகள் என்றாலும், தென் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர் என்றாலும், அவர்களது இரண்டாவது தலைமுறை ஜெர்மனியர்களாக மாறி விட்டது. தோல் நிறம் வெள்ளை என்பதும், ஒரே மதமான கிறிஸ்தவத்தை பின்பற்றியதும், ஜெர்மனியராகும் நடைமுறையை இலகுவாக்கியது. ஆனால் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் துருக்கிய சமூகம் ஜெர்மனியராக மாறுவதை, ஜெர்மன் அரசு விரும்பவில்லை. அதற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கை தான் "பல்லினக் கலாச்சாரம்". அதாவது துருக்கியர் தமது தனித்துவமான கலாச்சாரத்தை, மதத்தை தொடர்ந்து பேணி வரலாம். அவர்கள் ஜெர்மன் சட்டங்களை மதித்து நடந்தால் போதும். ஏற்கனவே அமெரிக்காவிலும் இதே போன்ற கொள்கை பின்பற்றப் படுகின்றது. உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், தனித்துவமான கலாச்சாரத்தை, மதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. குடியுரிமை வழங்கும் தினத்தில் மட்டும் "அமெரிக்க அரசுக்கு விசுவாசமாக இருப்பேன்" என்று உறுதிமொழி எடுத்தால் போதும்.

"தன்னுடைய நாட்டில் எங்களுடைய கலாச்சாரத்தை கட்டிக் காக்க அனுமதிக்கிறானே. ஆஹா... இந்த வெள்ளைக்காரனுக்கு தாராள மனசு!" என்று பல தமிழர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். தமிழர்கள் மட்டுமல்ல, துருக்கியர் போன்ற பிற இனத்தவரும் அவ்வாறு தான் சிலாகித்து பேசி வந்தனர். ஆனால் "உண்மையில் வெள்ளைக்காரனின் மனசுக்குள் என்ன இருந்தது?" என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. உலகில் எந்தவொரு கலாச்சாரமும், அந்நிய கலாச்சாரத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொள்வது சாதாரணம். "விக்டோரியா மகாராணி காலத்து ஆங்கிலேய கலாச்சாரக் கூறுகள் பல, தமிழ் கலாச்சாரமாக மாறியுள்ளன" என்ற உண்மை, இன்றைக்கும் பல தமிழர்களுக்கு தெரியாது. அது போன்று அந்நிய கலாச்சாரத்தின் சங்கமத்தால், ஜெர்மன் கலாச்சாரம் மாறுபடுவதை ஜெர்மன் அரசு விரும்பவில்லை. அந்நிய கலாச்சார ஊடுருவலை முன்கூட்டியே தடுப்பதற்கு கண்டுபிடித்த தந்திரம் தான் "பல்லினக் கலாச்சார சமூகம்."

பல்லினக் கலாச்சார சமூகம் பிற நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஜெர்மனி போன்ற சில ஐரோப்பிய அரசுகள் அதனை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், யூதர்கள் தனித்துவமான கலாச்சாரத்துடன், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செறிவாக வாழ்ந்ததனர். அதனால் யூதர்களை இலகுவாக குறிவைத்து ஒடுக்க முடிந்தது. இன்று அதே போன்ற நிலையில் பல்வேறு சமூகங்கள் வாழ்கின்றன. அவர்களை பொதுவாக வெளிநாட்டவர் என்றோ, அல்லது அந்நிய குடியேறிகள் என்றோ அழைக்கலாம். ஆனால் பல்லினக் கலாச்சாரம் என்ற மாயத்திரைக்குப் பின்னால் அவர்கள் ஓரங்கட்டப் படுகின்றனர். உதாரணத்திற்கு லண்டன் மாநகரில் இந்தியர்கள் செறிந்து வாழும் சவுத்ஹோல் பகுதி போல, பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் அரேபிய, துருக்கிய பகுதிகள் காணப் படுகின்றன. அந்த மக்கள் தாமாகவே தனது இனசனத்துடன் ஒரே இடத்தில் வாழ விரும்பியதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசும் அதைத் தான் எதிர்பார்த்தது. அன்று "எமது நாடு பல்லின சமூகங்களை கொண்டது." என்று கூறியதும், இன்று "பல்லினக் கலாச்சாரம் தவறு" என்று கூறுவதும், எல்லாமே நாடகம்.

"ஒற்றை ஜெர்மன் தேசியத்தை மறுத்து, பல்லின கலாச்சாரங்களைக் கொண்ட ஜெர்மனியாக" காண்பித்துக் கொண்டிருந்த காலம் மாறி விட்டது. ஜெர்மன் அரசியல்வாதிகள், தைரியமாக "பிற்போக்கான இஸ்லாமிய சமூகத்தின் அபாயம்" குறித்து பேசுகின்றனர். அத்தகைய மாற்றம் எப்படி ஏற்பட்டது? 9 /11 க்கு பின்னர் உலகத்தை அடியோடு மாற்றிய அமெரிக்காவுக்கே அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது. அமெரிக்காவிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் மேலெழுந்து வருகின்றது என்றால், ஜெர்மனியில் அது சாத்தியமில்லையா? இஸ்லாமியரையும், வெளிநாட்டவர்களையும் ஒன்று சேர குற்றஞ்சாட்டுவதன் மூலம் தான் ஜெர்மன் தேசியவாதத்தை மீளக் கட்டியமைக்கலாம். ஜெர்மன் நாட்டு அரசியல் விவகாரங்களை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு புரியும். ஒரு காலத்தில் "ஜெர்மன் தேசியம்" என்று சொல்வதே கெட்ட வார்த்தை என்றிருந்த காலம் மலையேறி விட்டது. இன்று யாருக்கும் வெட்கமில்லை. ஜெர்மன் தேசியத்தின் அவசியம் குறித்து பலர் பேசி வருகின்றனர். பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்தே அத்தகைய குரல்கள் ஒலிக்கின்றன.
***************

4 comments:

வானம் said...

உலகப்போரின்போது வாங்கிய உதையால்தான் இவர்கள் தங்களின் இனவெறியையும்,கொலைவெறியையும் கொஞ்சமாக மறைத்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.பொருளாதாரத்தில் இன்னும் அதிகமாக வளர்ந்துவிட்டால் பழைய இனவழிப்பு வேலையை திறம்பட தொடர்வார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.ஆஞ்சலோ மெர்கலின் உரையை விளங்கிக்கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி.

Unknown said...

2012 ல் உலகம் அழியும் என்பது மூடநம்பிக்கைக் கதையில்லை என்று நிறுவ நிறையப்பேர் பாடுபடுகிறார்கள் போலிருக்கிறது.. இன்னொரு பேரழிவுக்கு செருமனி மீண்டும் வித்திடாது என்று நம்புவோமாக

ஒசை said...
This comment has been removed by the author.
Pradeep.P said...

எங்கோ படித்த ஜாபகம்..... "" இன்னும் ஒரு யுத்தம் வந்தாலும் ஐரோப்பாவில் வருவதற்கு இல்லை"".