Saturday, December 11, 2010

நோர்வேயில் ஒரு குட்டி சோவியத் யூனியன்

சோவியத் கால நகரம் எவ்வாறு தோற்றமளிக்கும்? சோஷலிச சுவரோவியங்கள், லெனின் சிலை, இவை எல்லாவற்றையும் நீங்கள் இப்போதும் கண்டு களிக்கலாம். அதுவும் மேற்கத்திய ஐரோப்பிய நாடான நோர்வேயில்! சோவியத் மாதிரியில் கட்டப்பட்ட பாரேன்ட்ஸ்பூர்க் (Barentsburg) நகரம், வட துருவத்திற்கும், நோர்வேக்கும் இடையில் அமைந்துள்ளது. முன்பு ஸ்பிட்ஸ்பேர்கன் (Spitsbergen) என்று அழைக்கப்பட்ட தீவுக்கூட்டம், இன்று நோர்வேஜிய மொழியில் ஸ்வால்பார்ட் (Svalbard) என்று அழைக்கப்படுகின்றது. நோர்வீஜிய புராணக் கதை ஒன்றில் வரும், ஸ்வால்பார்ட் என்ற வட துருவப் பிரதேசம் இதுவாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். நவீன காலத்தில் ஒல்லாந்து நாட்டை சேர்ந்த கடலோடி பாரேன்த்ஸ் (Willem Barentsz) அந்த தீவுக் கூட்டத்தை கண்டுபிடித்தார். அதனால் தான் அவர் நினைவாக பாரேன்ட்ஸ்பூர்க் நகருக்கு நாமம் சூட்டப்பட்டது. வில்லம் பாரேன்த்ஸ், இந்தியாவுக்கு வட துருவக் கடல் பாதையை கண்டு பிடிக்க விரும்பி, தனது கடல் பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் அவரது குழுவினரால், ரஷ்யாவின் நோவா சியேம்ப்லா (Nova Zembla) வரை தான் செல்ல முடிந்தது.

பாரேன்த்ஸ்பூர்க் நகரில் முதலில் நோர்வீஜிய நிறுவனம் ஒன்று, சுரங்கத் தொழில் நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் தான் முதல் குடியிருப்புகளை அமைத்தனர். 1920 ல், ஒரு டச்சு நிறுவனம் (Nespico) நிலக்கரிச் சுரங்க உற்பத்தியை பொறுப்பெடுத்தது. அது பின்னர், 1932 ல் ஒரு சோவியத் அரச நிறுவனத்திற்கு (Trust Arktikugol) விற்று விட்டது. அன்றிலிருந்து ரஷ்ய, உக்ரேனிய தொழிலாளர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்து வருகின்றனர்.

பாரேன்த்ஸ்பூர்க் நோர்வேக்கு சொந்தமான நிலத்தில் இருந்த போதிலும், சோவியத் அரச நிறுவனம் அங்கே சுதந்திரமாக செயற்பட முடிந்தது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பாரேன்த்ஸ்பூர்க் செல்ல விசா தேவையில்லை. அங்கிருக்கும் ரஷ்ய (முன்பு சோவியத்) துணைத் தூதரகம், உலகில் வட துருவத்தில் இயங்கும் ஒரேயொரு தூதரகம். ரஷ்ய, உக்ரைன் தொழிலாளர்கள் இரண்டு அல்லது மூன்று வருட ஒப்பந்தப்படி அழைத்து வரப் படுகின்றனர். சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், தொழிலாளர் வருகை குறைந்து விட்டது. பிரமிடன் (Pyramiden) என்ற இன்னொரு சுரங்கத் தொழிலாளர் குடியிருப்பு மூடப் பட்டு விட்டது. பாரேன்த்ஸ்பூர்க்கில் தற்போது குறைந்தது 800 பேர் வசித்த போதிலும், சோவியத் கால சலுகைகள் குறைந்து விட்டன. பாரேன்த்ஸ்பூர்க்கில் ஒவ்வொரு வருடமும் 300000 தொன் நிலக்கரி அகழ்ந்தெடுக்கப் படுகின்றது. பெருமளவு நிலக்கரி மேற்கு ஐரோப்பாவுக்கும், ரஷ்யாவுக்கும் ஏற்றுமதியாகின்றது.

பாரேன்த்ஸ்பூர்க் நகர் குடியிருப்புகளுக்கு முன்னால், இன்றைக்கும் ஒரு பெரிய மார்பளவு லெனின் உருவச் சிலை காணப்படுகின்றது. சோவியத் கால லெனின் சிலைகள் நிலைத்து நிற்கும் சில இடங்களில் அதுவும் ஒன்று. அங்கே செல்லும் மேலைத்தேய பயணிகள், "ஏன் இந்த லெனின் சிலையை இப்போதும் வைத்திருக்கிறீர்கள்?" என்று உள்ளூர் மக்களைப் பார்த்துக் கேட்பார்கள். "அது எமது சரித்திரம். அதை ஏன் நாம் மறைக்க வேண்டும்?" என்று பாரேன்த்ஸ்பூர்க் வாழ் மக்கள் பதிலளிப்பார்கள். அங்கே மட்டுமல்ல, இன்றைக்கும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதிகளிலும் லெனின் சிலைகள் அப்படியே தான் இருக்கின்றன. சோவியத் காலத்தில் தான் அங்கெல்லாம் புதிய தொழில் வாய்ப்புகள், நகரங்கள் தோன்றின. பெரும்பாலும் சுரங்கத் தொழிலில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த தொழிலாளர்கள் கூட, கை நிறையப் பணத்துடனும், தங்க நகைகளுடனும் வீடு செல்வார்கள். தொழிலாளர்கள் நன்றி மறந்தவர்களல்ல. யாரும் தமது இழந்த பொற்காலத்தை நினைவு படுத்தும் சின்னங்களை அழிக்க மாட்டார்கள்.

பாரேன்த்ஸ்பூர்க் நகரில் சோவியத் காலத்தை நினைவு கூரும் அனைத்தும் இன்றும் அப்படியே பாதுகாக்கப் படுகின்றன. குடியிருப்புகளுக்கு பின்னணியில் உள்ள மலைப்பாறையில் "அனைவருக்கும் சமாதானம்" என்ற ரஷ்ய வாசகம் நட்சத்திர குறிக்கு கீழே காணப்படுகின்றது. தொழிலாளர் ஓய்வு நேரத்தை கழிக்கும் பிரமாண்டமான நீச்சல் தடாகம். ஒரே கூரையின் கீழ் அனைவருக்கும் சமைத்த உணவு பரிமாறப்படும் உணவுச் சாலை. கட்டடங்களின் உள்ளே சுவர்களை அலங்கரிக்கும் சோஷலிச ஓவியங்கள். லெனின் படம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை விற்கும் கடைகள். எல்லாம் அப்படியே இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் "குட்டி சோவியத் யூனியன்" சென்று பார்த்து விட்டு வரலாம். ஆனால் பயணம் அவ்வளவு இலகுவானதல்ல. லோன்கியர் விமான நிலையம் மட்டுமே வெளியுலகத்துடன் தொடர்பு படுத்துகின்றது. ஸ்வால்பார்ட் தீவுகளின் குடியிருப்புகளுக்கு இடையில் செப்பனிடப்பட்ட பாதைகள் இல்லை. அதனால், லோன்கியர் (Longyearbyen) நகரத்தில் இருந்து பாரேன்த்ஸ்பூர்க்கிற்கு படகுச் சேவை மட்டுமே உண்டு. குளிர் காலத்தில் பனிச்சறுக்கல் வண்டியில் பயணம் செய்யலாம். உலகில் அரிதான விலங்கினமான துருவக் கரடிகளை பார்ப்பதற்கும் சுற்றுலாப்பயணிகள் ஸ்வால்பார்ட் செல்கின்றனர்.


Barentsburg
Barentsburg Travel guide

4 comments:

பனித்துளி சங்கர் said...

தகவலுக்கு நன்றி நண்பரே .

Mohamed Faaique said...

really gud article... thnk u....

அருளாளனின் அடிமை said...

கலையரசன் அவர்களே உங்கள் மீது அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

உங்கள் கட்டூரைகள் பல மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி கார்ல்.மார்க்ஸ் போன்ற பல முக்கிய கம்யூனிச தலைவர்கள் கம்யூனிசத்தை இந்த உலகிற்க்கு அறிமுகம் செய்தவர்கள் யூதர்கள் என்று ஒரு செய்தி உண்டு அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

இருக்கட்டுமே அதனால் என்ன என்று நீங்கள் கூற கூடாது அல்லது ஏதாவது சப்பை கட்டு கட்டவும் கூடாது இதற்க்கு தகுந்த பதுல் அளிக்க வேண்டும்.

யூதர்களை பற்றி புட்டு புட்டு வைக்கும் உங்களுக்கு யூதர்களை பற்றி நான் சொல்ல தெவையில்லை அவர்கள் இந்த உலகில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு திட்டமிட்ட காரணம் இருக்கும்.

Kalaiyarasan said...

//உங்களிடம் ஒரு கேள்வி கார்ல்.மார்க்ஸ் போன்ற பல முக்கிய கம்யூனிச தலைவர்கள் கம்யூனிசத்தை இந்த உலகிற்க்கு அறிமுகம் செய்தவர்கள் யூதர்கள் என்று ஒரு செய்தி உண்டு அதை பற்றி உங்கள் கருத்து என்ன?//

இது நாஸிகளால் புனையப்பட்ட இனவாதப் பிரச்சாரம். முதலில் கம்யூனிசத்தை யாரும் உலகிற்கு அறிமுகம் செய்யவில்லை. மனித குலத்தின் முன்னோர்கள், உங்களது மூதாதையர்கள் உட்பட, கம்யூனிஸ்டுகள் தான். அதாவது ஆதி மனிதன் பொதுவுடமைப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தான். தனியுடமை பிற்காலத்தில் தோன்றியது. இதனை கார்ல் மார்க்ஸ் மட்டும் ஆய்வு செய்து நிரூபிக்கவில்லை. பகூனின் போன்ற வேறு பல தத்துவ ஆசிரியர்கள் இவற்றைப் பற்றி எழுதியுள்ளனர். சில இஸ்லாமிய அறிஞர்களும் எழுதியுள்ளனர்.

ஐரோப்பாவில் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்ட, உரிமைகள் மறுக்கப் பட்ட யூதர்கள் கம்யூனிசம் போன்ற கொள்கைகளால் கவரப்படுவது இயற்கை. ஆனால் யூதர்கள் அனைவரும் ஒரே குணத்தை கொண்டிருக்க முடியாது. முதலாளித்துவ யூதர்களும் இருந்துள்ளனர். நான் யூதர்களை ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக பார்க்கிறேனே தவிர இனத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. யூதர்களுக்கும் தமது மதத்தை பின்பற்ற உரிமை உண்டு.

யூதர்களை சுற்றி பின்னப்பட்ட மாயைகளை உடைப்பதும், தவறான புனை கதைகளை அம்பலப் படுத்துவதும் மட்டுமே எனது கட்டுரைகளின் நோக்கம். இவற்றை ஏற்கனவே பல யூத அறிஞர்கள் செய்து விட்டனர். யூதர்களும் சாதாரண மனிதர்கள் தான். யூதர்கள் மத்தியில் உள்ள இனவெறியர்களை மட்டுமே எதிர்க்க வேண்டும். மாறாக ஒட்டு மொத்த யூதர்களை எதிர்ப்பது தவறு. ஒரு இனவெறிக்கு தீர்வு இன்னொரு இனவெறி அல்ல. இஸ்ரேலை உருவாக்கியவர்கள் செய்த தவறுகளுக்கு இன்று இஸ்ரேலில் வாழும் மக்களை குற்றம் சாட்ட முடியாது. நாளை பாலஸ்தீனம் உருவானால் கூட அந்த மக்களுக்கு அங்கே வாழும் உரிமை உண்டு.