Thursday, March 03, 2011

தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

(பகுதி - 3)
-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகள் பலரிடமும் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற ஏக்கம் குடிகொண்டிருந்த போதிலும், இந்திய அனுபவங்களையும் தம்மோடு சுமந்து செல்ல எண்ணினார்கள். அரசு கொடுக்கும் ஒரு பிடி அரிசியில், காய்கறி சேர்த்து சமைத்து உண்ணும் அகதி வாழ்வில் உல்லாசப் பயணத்தை நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும் இந்தியா வந்தால், கோயில் பார்க்காமல் திரும்பக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இந்துக்களைப் பொறுத்த வரையில், இந்தியாவை தமது தாயகமாக கருதும் போக்கு தொன்று தொட்டு நிலவியது. இப்போதும் இலங்கை திரும்பிய முன்னாள் அகதிகள், தாம் இந்தியாவில் எந்தெந்த கோயில்களுக்கு சென்று வந்தோம், என்று கூறி அயலவரின் பொறாமையைக் கிளப்புவார்கள். எமது முகாமில் இருந்தும் இளைஞர்களின் குழு ஒன்று கோயில் பார்க்க கிளம்பியது. எனக்கு அப்போதும் சாமி, கோயில்களில் நம்பிக்கை இல்லாத போதிலும், ஊர் சுற்றக் கிளம்பினேன்.

பஸ் பயணத்திற்கு மட்டும் கையில் காசு வைத்திருக்க வேண்டும். ரயிலில் இலவசப் பிரயாணம் செய்யலாம் என்று கூறினார்கள். அது ஈழ அகதிகளுக்காக MGR வழங்கிய சலுகை என்றார்கள். (MGR அப்போதும் தமிழக முதலமைச்சராக இருந்தார்.) ரயிலில் டிக்கட் பரிசோதகர் வரும் போதெல்லாம், அகதி அட்டையைக் காட்டினால் போதும். தமிழ்நாடு மாநிலத்திற்குள், எந்த ரயிலிலும் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ய முடியும். ரயிலில் ஏறி திருச்சி சென்றோம். அங்கிருந்த கோயில்கள் எல்லாம் பார்த்து விட்டு, அன்றிரவு ரயில் நிலையத்திலேயே படுத்துறங்கினோம். மீண்டும் ரயில் ஏறி, நாம் வந்திறங்கிய இராமேஸ்வரம் வரையில் சென்று திரும்பி வந்தோம். வரும் வழியில் மறக்காமல் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் தரிசித்தோம். நாம் சந்தித்த இந்திய தமிழர்கள், எங்களை "சிலோன் காரர்கள்" என்று அழைத்து உரையாடினார்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் சிலோன்காரர்கள் என்று தான் அழைத்து வந்தனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் மலையகத் தமிழரை "இந்தியத் தமிழர்கள்" என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அவர்களது பெயரும் சிலோன்காரர்கள் தான்.

எமது தமிழக சுற்றுப் பயணத்தின் பின்னர், இந்திய-இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 90 % சதவீதமான இலங்கை அகதிகள், அதற்கு முன்னர் இந்தியாவை பார்த்திராதவர்கள். இந்தியத் தமிழருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. இந்தியாவுடனான அவர்களது தொடர்பு முழுவதும், சினிமா, சஞ்சிகைகள், நூல்கள் ஊடாகவே பரிமாறப்பட்டன. பெரும்பாலும் பாமர மக்கள், தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போலத்தான் இந்தியா இருப்பதாக நம்பினார்கள். இந்தியா வந்த பின்னர், அவர்களது மாயைகள் யாவும் அகன்றன. பிரமாண்டமான கோயில்களைத் தவிர, இந்தியாவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறவாரம்பித்தனர்.

பொதுவாக இரண்டு சமூகங்களும், ஒன்றை மற்றொன்று தாழ்வாகக் கருதுவதை உணரக் கூடியதாகவிருந்தது. சில அகதி முகாம்களில், அதிகாரிகளின் திமிரான பேச்சு எரிச்சலூட்டியது. வசதிக் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய போதெல்லாம், ஒன்றில் புறக்கணித்தார்கள், அன்றில் வாயை மூடிக் கொள்ள சொன்னார்கள். "சிங்களவர்களால் அழிக்கப் பட்டுக் கொண்டிருந்த அரிய உயிரினத்தை வைத்துப் பராமரிப்பது," போலப் பேசினார்கள். இதனால் வெறுத்துப் போன அகதிகள், "யுத்தம் மட்டும் இல்லையென்றால், எமது ஊரில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்," என்று பேசவாரம்பித்தனர்.

மிகப்பெரிய இந்திய-இலங்கை முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுந்தது. அகதி முகாமில் கிடைக்கும் சொற்பத் தொகை வாழ்வதற்கு போதாது என்பதால், கூலி வேலை தேடவாரம்பித்தனர். இலங்கையில் இலவசக்கல்வி வாய்ப்பை பயன்படுத்தி, பல்கலைக்கழகம் வரை படித்த ஏழை மாணவர்கள் கூட, கூலி வேலைக்கு சென்று வந்தனர். பட்டதாரிகள் கூட, இந்தியாவில் தமது பட்டங்களுக்கு மதிப்பில்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டனர். ஒரு ஈழ அகதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், எந்தவொரு நிறுவனமும் அவர்களுக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. மாநில, மத்திய அரசுகள் சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்தன. அகதிகள் கூலி வேலைக்கு செல்வதை மட்டும் தடை செய்யவில்லை. இதனால் உள்ளூர் முதலாளிகளும், ஒப்பந்தக்காரர்களும் வீதிகளை செப்பனிடும் வேலை, மற்றும் கட்டுமானப் பணிகளில் இலங்கை அகதிகளின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு இந்திய தொழிலாளிக்கு கொடுக்கும் சராசரி கூலியை விட குறைந்த அளவு ஊதியமாக வழங்கப்பட்டது.

ஈழ அகதிகள் என்றால் கடுமையாக வேலை வாங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. சில முதலாளிகள், அவர்களின் கையறுநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். மாதக் கணக்காக வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். ஒரு பக்கம், இந்தியத் தமிழ் முதலாளிகள் ஈழ அகதிகளின் உழைப்பை சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தனர். மறு பக்கம், தொழில் வாய்ப்பை இழந்த இந்தியத் தமிழ் தொழிலாளிகள் அதிருப்தி கொண்டனர். இந்தியாவில் கூலி வேலையாட்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை தலித் மக்கள். இவர்களது குடியிருப்புகளும் அகதி முகாம்களை அண்டியே காணப்பட்டன. தொழில் போட்டியால் ஏற்பட்ட முறுகல் நிலை, "இந்தியத் தமிழ்- இலங்கைத் தமிழ் முரண்பாடு" வளரக் காரணமாயிற்று. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர், ஈழ அகதிகளை தம்மை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். சமூகங்களுக்கு இடையிலான சிறு சிறு சச்சரவுகளின் பொழுது, இது போன்ற உணர்வுகள் மேலெழுந்து வெளிப்படையாக பேசினார்கள். இதற்கிடையே வசதி படைத்த அல்லது மேல்நிலை சாதி இந்தியத் தமிழர்கள், அத்தகைய பிரச்சினைகள் குறித்து எந்த அறிவுமற்று வாழ்ந்தனர்.

ஈழத்தில் பல்வேறு சாதிகளை சேர்ந்த அகதிகள் முகாமில் ஒன்றாக வாழ்ந்தனர். இந்திய வழக்கப்படி, ஈழ அகதிகளும் சாதி வாரியாக வகைப் படுத்தப் பட்டு பதியப்பட்டனர். அது ஒன்றும் கட்டாயமல்ல, எனக்குத் தெரிந்த பலர் படிவத்தில் சாதிப் பெயரை குறிப்பிடாமல் வெறுமையாக விட்டனர். சாதிப் பெயரை பதியும் நடைமுறை, இலங்கையில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கைவிடப் பட்டு விட்டது. (இன்று சிலர் இதைக் காட்டி ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லை என்று வாதிடுகின்றனர்.) ஆனால், கிராமங்கள் சாதி வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்த சமூக அமைப்பைக் கொண்டிருந்தன. ஆகவே இந்தியா வந்த பின்னும் சாதிப் பெயரை பதிந்து கொள்வதில் பலருக்கு பிரச்சினை இருக்கவில்லை. மாறாக, இந்த சந்தர்ப்பத்தில் தமது சாதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை கண்டு கொண்டார்கள். தங்களை "வெள்ளாளர்களாக" பதிந்து கொண்டார்கள். இதனால் சாதிய படிநிலையில் உயர்ந்து விட்டதாக மனதளவில் திருப்தி கொண்டனர். யார் கண்டது? சில வருடங்களில் ஈழத்து சாதியமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படலாம்.

(தொடரும்)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

2 comments:

தமிழரின் தாய்மதம் said...

இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.
உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.
மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.
மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.
திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிக்க? சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.
ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.
எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.
இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை,

தமிழரின் தாய்மதம் said...

இந்தியாவிடம் காட்டிய இதே தந்திரத்தை,
.
.
.
அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.
பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.
அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.
இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி , அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்
சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று, அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.
மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது.
ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,
உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?
ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,
"ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை" ,
பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.