Thursday, March 31, 2011

ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 8)

இந்திய இராணுவத்துடன் யுத்தம். பலரால் நம்ப முடியாமல் இருந்தது. கோட்டை முகாமில் இருந்து யாழ் நகரை நோக்கி, சரமாரியான எறிகணை வீச்சுகள் நடந்தன. இதனால் யாழ் நகருக்கு வேலைக்கு சென்ற அனைவரும், நேரத்தோடு வீடு திரும்பினார்கள். என்ன நடக்கின்றது என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. யாழ் நகர வீதிகள் எங்கும் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த யுத்தம் நினைவுக்கு வந்தது. இப்போதும் இலங்கை இராணுவமே மோதுவதாக நினைத்தனர். ஆனாலும், அவர்கள் எப்படி திரும்ப வந்தார்கள்? எல்லோர் மனதிலும் குழப்பம். ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட புலிகளும், ஆரம்பத்தில் சிங்கள இராணுவத்தையே குறி வைத்து தாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த கண்ணி வெடிச் சம்பவத்தில், இந்தியப் படையின் டிரக் வண்டிக்கு பின்னால் சென்ற, சிறிலங்கா படையினரின் வாகனமே தாக்கப்பட்டது.

இந்திய அமைதிப் படையும், தமிழர்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொண்டது. உதாரணத்திற்கு திருகோணமலையை ஈழ சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரமாக்குவதற்கு இந்திய இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியது. வருங்கால மாகாண சபையும் அங்கேயிருந்து இயங்கவிருந்தது. அதற்கு முதல் படியாக, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை அப்புறப் படுத்த உதவியது. அத்தகைய சம்பவத்தை, அதற்கு முன்னரும், பிறகும் இலங்கை வரலாற்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, தென்னிலங்கையில் சிறை வைக்கப்பட்ட சிங்கள குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, தமிழர் பகுதியில் குடியேற அனுப்பி வைத்தது. பாரம்பரிய தமிழர்களின் நிலங்களை அபகரித்து, தங்கள் குடும்பத்தை தருவித்து குடியேறினார்கள். 1983 கலவரத்திற்கு முன்னரே, திருகோணமலை கலவரப் பூமியாக காட்சியளித்தது. கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைத்து வந்தது. இந்திய இராணுவத்தின் வருகையுடன் நிலைமை தலைகீழாக மாறியது. திருகோணமலை நகரிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் குடியேறிய சிங்களவர்களை விரட்டியடித்த தமிழ் இளைஞர்களுக்கு கிரேனேட் விநியோகம் செய்தது. முன்னர், சிங்களக் குடியேறிகளால் பாதிக்கப் பட்டு, பூசா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு விடுதலையானவர்கள் பழி தீர்க்க கிடைத்த சந்தர்ப்பமாக கருதினார்கள்.

கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், இலங்கையின் இனப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மூவின மக்கள், இன அடிப்படையில் பிளவுண்டு மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகும். சிறிலங்கா அரசு, சிங்கள, முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படை அமைத்து, ஆயுதங்களைக் கொடுத்திருந்தது. (இந்தியா, ஒரிசாவில் உள்ள "சல்வா ஜூடும்" போன்றது.) சிறிலங்கா இராணுவத்துடனான யுத்தம் நடைபெற்ற காலங்களில், ஊர்காவல் படைகளால் பல தமிழ்க் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டிருந்தது. இதனால் பெருமளவில் முஸ்லிம் கிராமங்களும், சிறிதளவு சிங்களக் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இலங்கையின் இனப்பிரச்சினையை, இந்தியாவும் எளிமையாக புரிந்து கொண்டதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை வளம் நிறைந்த கிழக்கு மாகாணத்தில், இனங்களிடையே பகை முரண்பாடுகளை சிறிலங்கா அரசு, திட்டமிட்டு வளர்த்திருந்தது.

இனப்பிரச்சினைப் புயல் கிழக்கில் மையங் கொண்ட போதிலும், போர் மேகங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறிய நிலப்பகுதியைத் தவிர, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள, யாழ் குடாநாட்டின் பூகோள அமைவிடம் எப்போதும் இராணுவத்திற்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. இராணுவ முகாம்கள் அனேகமாக கடற்கரைப் பகுதியை ஒட்டியே இருந்ததால், அவற்றை முற்றுகையிடுவது போராளிகளுக்கு இலகுவாக இருந்தது. சிங்கள இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு சூனியப் பிரதேசம் இருக்கும். மயான பூமியாக காட்சி தரும் அந்த இடத்திற்கு அருகில் செல்லக் கூட, மக்கள் அஞ்சுவார்கள். சமாதான காலத்தில், இந்தியப் படையினர் முகாம் அருகாமையில் செல்லும் வீதிகள் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டன.

எமது உறவினர்கள் சிலர், காங்கேசன்துறை முகாம் அருகில் மீள்குடியேற்றத்திற்காக சென்றிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு செல்லும் வழியில், முகாமின் மத்தியில் இருந்த மைதானத்தில் ஆர்ட்டிலறி பீரங்கிகள் துருத்திக் கொண்டு நின்றன. முன்பு சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசையை மட்டும் கேட்டு வந்தோம். எறிகணைகளை ஏவும் ஆர்ட்டிலறிகளை அப்போது தான் நேரில் பார்த்தோம். இன்னும் சில வாரங்களில், இந்திய இராணுவம் இதே ஆர்ட்டிலரிகளை பயன்படுத்தி பொது மக்களின் குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்று, அப்போது யாரும் நினைக்கவில்லை. இலங்கை இராணுவம் காசுக் கணக்குப் பார்த்து ஷெல் வீசியிருப்பார்கள். இந்திய இராணுவத்தினர் வகை தொகையின்றி அள்ளிக் கொட்டினார்கள். நிமிடத்திற்கொரு ஷெல் வந்து விழுந்து வெடித்தது.

காங்கேசன்துறை, பலாலி முகாம்களில் இருந்த படையினரே முதலில் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதனால், அந்த முகாம்களை சுற்றி பத்து மைல் சுற்றாடலில் இருந்த வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. இந்தியப் படையினர் முன்னேறுவதற்கு டாங்கிகளும் பெருமளவு உதவின. வீதிகளில் கண்ணி வெடி புதைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்பதால், டாங்கிகள் வீட்டு வளவுகளைக் கடந்து முன்னேறின. எதிரில் அகப்பட்ட மதில் சுவர், மரம்,செடி எல்லாவற்றையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறின. சில இடங்களில் அலறி ஓடிய பொது மக்கள் மீதும் டாங்கிகள் ஏறிச் சென்றன. இந்திய இராணுவத்தின் போரிடும் முறை, சிறிலங்கா இரானுவத்தினதை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. நிலங்களை கைப்பற்ற முன்னேறும் சிறிலங்கா படையினர், தமது பக்கத்தில் அதிக இழப்பு ஏற்பட்டால் பின்வாங்கி விடுவார்கள். ஆனால் சனத்தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவை சேர்ந்த இராணுவத்திற்கு, ஆட்பற்றாக்குறைப் பிரச்சினை இருக்கவில்லை. எத்தனை போர் வீரர்கள் செத்து மடிந்தாலும், அலை அலையாக வந்து கொண்டே இருந்தனர்.

இவ்வளவு தீவிரமாக போரிட்டும், இந்தியப் படை யாழ்நகரை அடைவதற்கு ஒரு மாதம் எடுத்தது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி பெருமளவு நகரமயக்கப் பட்டிருந்தது. குடாநாட்டிலேயே சன நெரிசல் அதிகமுள்ள பிரதேசமும் அது தான். வலிகாமம் என்றழைக்கப்படும் செம்மண் பிரதேசம் முழுவதும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் நடந்த உக்கிரமான சண்டையில் சிக்கி சின்னாபின்னப் பட்டது. ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, யாழ்குடாநாடு சந்தித்த முதலாவது மனிதப் பேரவலம் அப்போது தான் ஏற்பட்டது. வடக்கே காங்கேசன்துறையில் இருந்து, தெற்கே யாழ் நகரம் வரையிலான பகுதி, யாருமற்ற சூனியப் பிரதேசமாகிக் கொண்டிருந்தது. மக்கள் சாரிசாரியாக கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்.

யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியான, வடமராட்சியும், தென்மராட்சியும் அமைதியாக காட்சியளித்தன. அங்கே வந்து சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள், தமக்குத் தெரிந்த உறவினர்கள் வீடுகளில் தங்கினார்கள். உறவினர்கள் இல்லாதோர் பாடசாலைகளில் தங்கினார்கள். இன்னும் சிலர் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இந்திய இராணுவம், யாழ் நகரம் வரை வந்து விட்டதால், புலிகளும் தென்மராட்சி ஊடாக வன்னிக் காடுகளை நோக்கி பின்வாங்கினார்கள். தென்மராட்சிப் பகுதி, யாழ் குடாநாட்டை வன்னி பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவிருந்தது. அதனால் அங்கே யுத்தம் நடக்காமல் தவிர்க்கப் பட்டது. இருப்பினும் தென்மராட்சியை கைப்பற்றும் நோக்குடன், இந்திய இராணுவம் அதிர்ச்சி தரும் படுகொலையை நடத்தியது.

(தொடரும்...)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:







No comments: