Wednesday, April 27, 2011

யுத்தம் செய்! ஆயுத விற்பனை அதிகரிக்கும்!!

பிரான்ஸ் TF1 தொலைக்காட்சி செய்தியை தற்செயலாக பார்த்தவர்கள், அந்த மாபெரும் உண்மையை அறிந்து திகைத்திருப்பார்கள். லிபியாவில் நடக்கும் போர் குறித்த செய்தி அறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதல் விபரங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். "லிபியாவில் நடக்கும் போரினால் எமது ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது. சந்தையில் புதிதாக வாங்கிய விமானங்களின் தாக்குதிறனை பரீட்சிப்பதற்கு இது அரிய சந்தர்ப்பம். எமது விமானிகளுக்கும் போர்க்களத்தில் நேரடிப் பயிற்சி கொடுக்க முடிகிறது." தற்செயலாக, ஒரு தடவை மட்டுமே அந்த அதிகாரியின் நேர்காணல் ஒளிபரப்பானது. விழித்துக் கொண்ட பிரெஞ்சு அரசு, அவசரமாக விடுத்த வேண்டுகோளின் பின்னர் அந்தப் பகுதி நீக்கப்பட்டு விட்டது. மேலைத்தேய "மனிதாபிமான" அரசுகள், கடாபி என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையில் இருந்து, லிபிய மக்களை காப்பாற்றுவதற்காகவே, குண்டு போடுவதாக மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புதிதாக உற்பத்தி செய்யப் பட்ட நவீன ஆயுதங்களை சந்தையில் விற்பதற்காகத் தான், லிபியா மீது போர் தொடுக்கப் பட்டது. இந்த உண்மையை மக்கள் அறிந்துகொண்டால், கற்பிக்கப்பட்ட நியாயம் அடிபட்டுப் போகாதா? மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமான முகமூடி கிழிவதை பொறுத்துக் கொள்ளலாமா? ஆயிரம் காரணம் சொல்லுங்கள். உலகில் தயாரிக்கப்படும் முக்கால்வாசி ஆயுதங்கள் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா?

சாதாரணமாக எவரும் விக்கிபீடியா, கூகிளில் தேடிப் பெறக் கூடிய தகவல் இது. ரஷ்யாவை தவிர்த்தால், அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கும் முதல் ஐந்து நாடுகள் மேற்குலகில் இருக்கின்றன. உலகில் ஆயுத உற்பத்தியில் முன்னணியில் நிற்பது, வேறு யார்? அமெரிக்கா தான். உலகில் 30 சதவீத ஆயுதங்கள் அமெரிக்க தயாரிப்புகள் தான். அவை தான் அதிகளவில் விற்பனையாகின்றன. பனிப்போர் முடிந்து இருபதாண்டுகளுக்கு மேலானாலும், இன்றைக்கும் ரஷ்யா தான் அமெரிக்காவுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை தயாரிக்கிறது. (23 %) அதற்கு அடுத்ததாக ஜெர்மனி (11 %), பிரான்ஸ் (7 %), பிரிட்டன் (4 %), நெதர்லாந்து (3 %). இவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் மனித உரிமைகள், போர்க்குற்றம் பற்றி விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், ஆயுதங்களை விற்று கொலைகாரர்களை ஊக்குவிக்கிறார்கள். எல்லாமே பணத்துக்காகத் தான். எங்கேயோ ஒரு மூன்றாம் உலக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் தானே, முதலாம் உலக மக்கள் செல்வந்த வாழ்வு வாழலாம்? இனப்படுகொலை, போர்க்குற்றம், எது நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. ஆயுதங்களை விற்றோமா, இலாபம் சம்பாதித்தோமா, அது தான் முக்கியம். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பணக்கார நாடுகளாக அவர்களால் நிலைத்து நிற்க முடியுமா? ஒருவனின் மரணம், இன்னொருவனுக்கு உணவு. ஆதலினால் போர் செய்வீர்.

எங்களால் நம்ப முடியாது. ஆனால் இது தான் உலக யதார்த்தம். புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து காட்சிக்கு வைத்தால் மட்டும் போதாது. அவற்றின் செயல்பாட்டை நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். எங்காவது ஒரு நாட்டில் போர் நடந்ததால் தானே, புதிய ஆயுதங்களை பரீட்சித்துப் பார்க்க முடியும்? அவை எத்தனை மக்களின் உயிரைக் குடிக்கும், எத்தனை சொத்துகளை நாசமாக்கும், என்றெல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டாமா? உதாரணத்திற்கு ஐரோப்பியரின் புதிய தயாரிப்பான Eurofighter Typhoon விமானத்தை எடுத்துக் கொள்வோம். அதன் இணையத்தளத்தில் பின்வருமாறு விளம்பரம் செய்கிறார்கள். "The world's most advanced new generation multi-role/swing-role combat aircraft available on the market." சும்மா விளம்பரம் செய்து விட்டால் போதுமா? இதுவரை எந்த ஒரு யுத்தத்திலும் பாவிக்கப்படாத போர்விமானத்தை எவன் வாங்குவான்? தற்போது லிபியா மீது நேட்டோ படைகள் நடத்தும் தாக்குதல்களில், அந்த விமானங்கள் ஈடுபடுத்தப் படுகின்றன. Eurofighter விமானங்களின் தாக்குதிறன் குறித்த விபரங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து மகிழலாம். சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாம் இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சில முக்கிய வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, பிரேசில், குரோவாசியா... இன்னும் பல நாடுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.

அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவதற்காக ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளது. தொலைதூர இலக்குகளைத் தாக்குவதற்கு அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆயுதங்களை பாவிக்க வேண்டிய தேவை இருந்தது. புதிதாக கண்டுபிடித்த Prompt Global Strike, அதே அளவு தாக்குதிறனைக் கொண்ட, மரபு வழிப் போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதம். அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில், உலகின் எந்தப் பாகத்திலும் சென்று வெடிக்கக் கூடியது. செய்மதி அந்த ஆயுதத்தை இலக்கு நோக்கி வழிநடத்தும். ஆனால், அந்த ஆயுதம் சந்தைக்கு வர இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் அமெரிக்காவின் Prompt Global Strike நிகழ்த்தப் போகும் அற்புதங்களைக் காண தயாராகுங்கள். ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தது இதற்காகத் தானா?

இன்று நேற்றல்ல, கடந்த எழுபதாண்டுகளாக போர்க்காலத்தில் தான் ஆயுத வியாபாரம் சூடு பிடிக்கின்றது. 1937 ம் ஆண்டு, ஸ்பானியாவில் குவேர்னிகா நகரம் ஜெர்மன் விமானங்களின் குண்டுவீச்சில் அழிக்கப் பட்டது. பிரான்கோவின் பாஸிச படைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முதல் நடந்த போர் அது. பிற்காலத்தில் போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நாஸி அரசின் மந்திரி கேரிங் இவ்வாறு கூறினார்:"புதிதாக அமைக்கப்பட்ட எங்களது விமானப்படையினதும், விமானிகளினதும் முதலாவது போர்க்கள அனுபவம்." நாஸி ஜெர்மனி சொல்லிக் கொடுத்த பாடத்தை அமெரிக்கர்கள் வியட்னாம் போரில் பின்பற்றினார்கள். BLU -82B /C -130 என்ற உற்பத்திப் பெயரைக் கொண்ட, "Daisy Cutter " என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாசகார ஆயுதத்தை வியட்னாம் காடுகளில் போட்டார்கள். அந்தக் குண்டு, வனாந்தரக் காட்டின் மத்தியில் 600 மீட்டர் சுற்றளவுக்கு மரங்களை அழித்து விடும். மரங்கள் அழிக்கப்பட்ட இடத்தில், ஒரு ஹெலிகாப்டர் இறங்குமளவிற்கு இடம் கிடைத்து விடுமாம். டெய்சி கட்டர் குண்டுவீச்சினால் பரவிய காட்டுத்தீயில், அங்கு வாழ்ந்த வியட்நாமிய மக்களும் மரணமடைந்தனர். சீறிப் பாய்ந்த தீச் சுவாலைகள் மிரண்ட மக்களை எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. அதைப் பற்றி யாருக்கு கவலை? ஹெலிகாப்டர் தரையிரங்குமளவு இடம் கிடைத்ததல்லவா? அது அல்லவா வியாபாரத்திற்கு அவசியமான விளம்பரம்?

குவைத் மீட்பதற்கு நடந்த முதலாவது வளைகுடா போரில், "Bunker Buster " குண்டுகள் பிரயோகிக்கப் பட்டன. சதாம் ஹுசைனின் நிலக்கீழ் மறைவிடங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் ஏவப்பட்டன. பின்னர் ஆப்கான் போரில், அல்கைதா/தாலிபான் தலைவர்கள் பதுங்கியிருந்த குகைகளை தகர்க்க பயன்படுத்தப் பட்டன. ஆனால் இத்தகைய நவீன ஆயுதங்களால் தாலிபானை அழிக்க முடியவில்லை. அதனால் தற்போது ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளார்கள். Thermobaric (வெப்ப அமுக்க) குண்டுகள், விழுந்த இடத்தில் பிராணவாயுவை உறிஞ்சி எடுத்து விடும். இதனால் உள் உடல் உறுப்புகள் யாவும் பாதிக்கப்படும். பிரித்தானியா கண்டுபிடித்துள்ள Light weight anti -structure missiles சுவரை துளைத்துச் சென்று உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டது. XM25 Individual Airburst Weapon System (IAWS), இதுவும் சந்தையில் புதிதாக வந்துள்ள அமெரிக்க ஆயுதம் தான். இது ஒரு சாதாரணமான கிரனேட் வீசு கருவி. ஆயினும் லேசரால் தூரத்தை அளந்து, கிரனேட் குறிப்பிட்ட இலக்கின் மீது விழுந்து வெடிக்க வைக்கலாம். இந்த புதிய ஆயுதங்களை வாங்கி பாவிக்க விரும்புகிறீர்களா? உடனடியாக ஒபாமாவை தொடர்பு கொள்ளவும். வாங்குபவர் ஏதாவது ஒரு அரசாங்க சார்பாக தொடர்பு கொள்வது விரும்பத் தக்கது. அரசுகளுடன் மட்டும் தான் அவர்கள் வியாபாரம் பேசுவார்களாம். கறுப்புச் சந்தையில் ஆயுதம் விற்கும் சில்லறை வியாபாரிகளும் இருக்கிறார்கள். பெரும்பாலும் சிறிய ரக ஆயுதங்களை அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது பெரிய முதலாளிகள், சில்லறை முதலாளிகளை பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள்.

6 comments:

Saravanan's blogs said...

Nice story

தனிமரம் said...

அழகான விளக்கங்கள் போர்த்தளபாடங்கள் முக்கிய படை நகர்வின் ஒழுங்கமைப்பல்லவா! ஜனநாயகம் ,மனிதாவிமானம் எல்லாம் ஆயுதவியாயாரியிடம் எதிர்பார்க்கலாமா!

PPM said...

GOOD ARTICLE....

HASAN GANI

PPM said...

போலி ஜனநாயக வாதிகளின் தோலுரித்த கட்டுரைக்கு நன்றி..பாராட்டுக்கள் !!!

தொடர்க உமது பணி

அன்புடன் ஹசன்கனி

Nasar said...

தோழரே நல்ல பதிவு .......
இன்று உலகத்தில் உற்பத்தியாகும் 75 % ஆயுதங்கள்ளை உற்பத்தி செய்பவர்கள்
கிருத்துவ நாட்டினரே ,ஆதாவது சமாதானத்தை வாய் கிழிய பேசும் போலி CHRISTIANS PEOPLS
இவர்களால்தான் உலகத்தில் அமைதி இல்லை ........
அமைதியின் மொத்த குத்தகை காரர்கள் .........
உலகத்தில் அமைதியை போதிக்க வந்த ஏசுவின் சீடர்கள் ??!!
அறிவு கெட்ட, நாசகார WESTERN 'MAFIA' நிசம்....
தோழரே நல்ல பதிவை பகிரிந்தமைக்கு மிக்க நன்றிகள் பல ...
தொடரட்டும் உங்கள் பணி...............

Nasar said...

தோழரே நல்ல பதிவு .......
இன்று உலகத்தில் உற்பத்தியாகும் 75 % ஆயுதங்கள்ளை உற்பத்தி செய்பவர்கள்
கிருத்துவ நாட்டினரே ,ஆதாவது சமாதானத்தை வாய் கிழிய பேசும் போலி CHRISTIANS PEOPLS
இவர்களால்தான் உலகத்தில் அமைதி இல்லை ........
அமைதியின் மொத்த குத்தகை காரர்கள் .........
உலகத்தில் அமைதியை போதிக்க வந்த ஏசுவின் சீடர்கள் ??!!
அறிவு கெட்ட, நாசகார WESTERN 'MAFIA' நிசம்....
தோழரே நல்ல பதிவை பகிரிந்தமைக்கு மிக்க நன்றிகள் பல ...
தொடரட்டும் உங்கள் பணி...............