Monday, April 16, 2012

நோர்வே சோஷலிச இயக்கத்தின் தோற்றம்

உழைக்கும் மக்களின் போராட்டம் நடைபெறாத, குறைந்தது நிறுவனமயமாக்கல் ஏற்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், அதே போன்ற மக்கள் எழுச்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றாததற்கு பலரும் பல வகையான காரணங்களை கூறுகின்றனர். பல சமூகப் புரட்சிகள் தோன்றிய 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், தமது நாடுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்கள், காலனிகளில் வாழ்ந்த மக்களைப் போய்ச் சேராதவாறு இருட்டடிப்புச் செய்து வந்துள்ளனர். பிரான்ஸில் ஏற்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சி தோல்வியடைந்த போதிலும், அது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சித் தீயை மூட்டி விட்டது. ஐரோப்பிய கண்டத்தின் வட முனையில் அமைந்துள்ள, நோர்வே நாட்டில் கூட பிரெஞ்சுப் புரட்சி தாக்கம் செலுத்தியுள்ளது. அந்த நாட்டில் முதன் முதலாக தொழிலாளர் அமைப்பை ஸ்தாபித்த மார்குஸ் திரானே (Marcus Thrane) பற்றிய பதிவு இது. 


இன்றைய நோர்வேயின் ஆளும் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியுமான, தொழிலாளர் கட்சி (Arbeiderspartiet), தன்னை "மார்குஸ் திரானே இயக்கத்தின்" நீட்சியாக கூறிக் கொள்கின்றது. இருப்பினும், 1880 முதல் 1890 வரையில், நோர்வேயின் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமைப்பு இன்று இல்லை. நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் கட்சி, எல்லாவற்றுக்கும் அதுவே முன்னோடி. 1849 ம் ஆண்டளவில், ஒரு மாணவனாகவிருந்த மார்குஸ் திரானே, நோர்வேயின் முதலாவது தொழிலாளர் அமைப்பை நிறுவினார். ஆரம்பத்தில் அந்த அமைப்பில் 160 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அந்த அமைப்பின் புரட்சிகரமான கருத்துகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் அணி திரண்டனர். 1850 ம் ஆண்டளவில், நோர்வே முழுவதும் 300 தொழிற்சங்கங்களும், அவற்றில் 30000 உறுப்பினர்களும் இருந்தனர். சாதாரண தொழிலாளர்கள் மட்டுமல்லாது, சிறு வணிகர்கள், கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள், ஆகியோரும் உறுப்பினர்களாக சேர்ந்திருந்தனர். அன்று அவர்கள் எல்லோரும் "திரானியர்கள்" (Thranittere) என்று அழைக்கப் பட்டனர்.

திரானியர்கள், நோர்வீஜிய மக்கள் சகலருக்குமான சம உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். அன்று பிரபுக்களும், வசதிபடைத்தோரும், நிலவுடைமை விவசாயிகளும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதனால், அனைத்துப் பிரஜைகளுக்குமான வாக்குரிமைக்காகவும் போராடினார்கள். அரசு, அனைவருக்கும் பொதுவான கல்வித் திட்டத்தில் முதலிட வேண்டுமெனவும், உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும் கோரி வந்தனர். மேலும், நிலமற்ற ஏழை மக்களுக்கு, அரசாங்கமே நிலம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தது. திரானியர்கள் நடைமுறைப் படுத்தக் கோரிய, பொருளாதார மாற்றங்களைத் தவிர, சமூக மாற்றங்களும், அதிகாரத்தை கையில் வைத்திருந்த வர்க்கத்தினர் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது.

அன்றைய கால கட்டத்தில், சொந்தமாக, ஆயிரக்கணக்கான பரப்பளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மட்டுமே இராணுவ சேவையிலும் ஈடுபடுத்தப் பட்டனர். மத்திய காலங்களில், போரில் அந்நிய நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் இராணுவம், போர் முடிந்த பின்னர் ஆக்கிரமித்த நிலங்களை தமக்குள் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வர்க்கம், அல்லது சாதியை சேர்ந்த மக்கள், விவசாயிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் இருப்பது, அன்றைய ஐரோப்பாவில் சர்வ சாதாரணம். ஒரு நாட்டின் வளங்கள் யாவும் அந்த வர்க்கத்தின்/சாதியின் ஆதிக்கத்திற்குள் அடங்கி விடும். இதனால், அனைத்து பிரஜைகளும் இராணுவ பயிற்சி பெற வேண்டும் என்ற கோரிக்கை, அந்த வர்க்கத்தின் இருப்புக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலாக பார்க்கப் பட்டது.

நோர்வீஜிய நிலப்பிரப்புக்கள், அரச அதிகாரிகளின் கண்களுக்கு, மார்குஸ் திரானே ஒரு "பயங்கரவாதி" போன்று தோற்றமளித்தார். 1851 ம் ஆண்டு, திரானேயும், பிற தொழிற்சங்க தலைவர்களும் கைது செய்யப் பட்டனர். இறுதியில், அவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து செல்ல சம்மதித்தார். உண்மையில், அவர் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், திரானே இயக்கத்தின் நீட்சி என்று கூறிக் கொள்ளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சியிலும், புரட்சிகர அமைப்புகள் அடக்கப் பட்டன. அதற்கு காரணம், சமூக ஜனநாயக கட்சி, தனது அடித்தளமான தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுத்து, ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இது நோர்வேயில் மட்டும் நடக்கவில்லலை, அநேகமான ஐரோப்பிய நாடுகளில் இது தான் நிலைமை. இதனால், அதிலிருந்து பிரிந்து சென்ற நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை கட்சிக் கொள்கையாக வரித்துக் கொண்டது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நோர்வே ஜேர்மனிய நாஜிப் படையினரினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய கட்சி என்பதால், மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தது. போர் முடிந்த பின்னர் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. 12 சதவீத வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானது. ஆளும் வர்க்கத்திற்கு அதைக் கூட சகிக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அரசால் அச்சுறுத்தப் பட்டனர். அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப் பட்டது. இதனால், நோர்வீஜிய கம்யூனிச கட்சி பலவீனமடைந்தது. நோர்வேயில் உழைக்கும் வர்க்க மக்களின் போராட்டத்தை ஒடுக்கி விட்டோம் என்று, ஆளும் வர்க்கம் நம்பியது. 1973 ம் ஆண்டு, புதியதொரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவதரித்தது. வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்காவின் அட்டூழியங்களை கண்ட இளந் தலைமுறையினர், தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி (Arbeidernes kommunistparti) என்ற புதிய மாவோயிச கட்சியை உருவாக்கினார்கள். ஆனால், காலப்போக்கில் அதுவும் சீரழிந்து, சின்னாபின்னமாகி விட்டது.


மார்குஸ் திரானே யின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர் எழுதிய நூல்களும் (நோர்வீஜிய மொழியில்) :
Marcus Thrane


 *********************************************** 
 பிற்குறிப்பு: தமிழுலகம் அறிந்திராத ஐரோப்பிய இடதுசாரி சிந்தனையாளர்கள், அவர்களின் படைப்புகளைப் பற்றிய அறிமுகத் தொடர் இது. 

 இதோடு தொடர்பான முன்னைய பதிவுகள்: முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

No comments: