Friday, February 22, 2013

அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆப்கான் ஜிகாதிகள்

[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்]

(பாகம் - 5)
கடும்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளான, ஆப்கான் ஜிகாத் தலைவர்களை, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடுகின்றார். (1985)


"நீங்கள் பிறப்பதற்கு முந்திய வரலாறு பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் குழந்தையாகவே இருப்பீர்கள்."Marcus Tullius Cicero (ரோம தத்துவஞானி)

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் உருவான பின்னர் பிறந்த இளைய தலைமுறையினருக்கு கடந்த காலம் பற்றி எதுவும் தெரிந்திருக்கப் போவதில்லை. அவர்கள் தான் பெருமளவில் "விஸ்வரூபம்" திரைப்படத்தை பார்க்கப் போகிறார்கள். அத்தகையோரை ஏமாற்றுவது சுலபம் என்று கமல்ஹாசன் கணக்குப் போட்டிருக்கலாம். தாலிபான் என்றால் என்ன? அல்கைதா என்றால் என்ன? அவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? அந்த இரண்டு இயக்கங்களையும் யார் உருவாக்கினார்கள்? யார் நிதியும், ஆயுதங்களும் வழங்கினார்கள்? ஐம்பது வயதை தாண்டிய கமல்ஹாசனுக்கு அந்த விபரம் எதுவும் தெரியாமல் இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கத்தினுள் ஊடுருவிய, RAW அதிகாரியான கமல்ஹாசன், புறாக்களை வைத்து அமெரிக்காவில் நாச வேலைகளை ஏற்படுத்த நினைக்கும் முல்லா ஓமாரின் திட்டங்களை அறிந்து கொள்கிறார். பிற்காலத்தில், அமெரிக்காவில் வாழும் காலத்தில், தற்செயலாக FBI யினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் நேரத்தில், அந்த தகவல்களை தெரிவிக்கிறார். பின்னர், FBI படையினருடன் சேர்ந்து, ஓமாரின் அணுகுண்டு சதித் திட்டத்தை முறியடிக்கிறார். அது வரைக்கும், அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வுத் துறையான FBI க்கும், வெளிநாட்டு புலனாய்வுத்துறையான CIA க்கும், எதுவும் தெரியாது என்று சாதிக்கிறார். திரைக் கதாசிரியர் கமல்ஹாசனின் அப்பாவித்தனத்தை நினைத்து சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை.

2008 ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட தாக்குதலை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த தாக்குதலை நடத்த வந்து பிடிபட்ட, கசாப் என்ற இளைஞனுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப் பட்டு விட்டது. ஆனால், நியூயோர்க் 9/11 தாக்குதலைப் போன்றது என்ற அர்த்தத்தில், 26/11 என்று குறிப்பிடப் படும் மும்பை தாக்குதல் தொடர்பாக, David Headley என்ற அமெரிக்க பிரஜை, அமெரிக்காவில் 35 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். இது குறித்து இந்திய ஊடகங்கள் கூட மௌனம் சாதிக்கின்றன. அதற்கு காரணம், அந்த நபர் ஒரு முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி. அந்த குற்றவாளியை விசாரிப்பதற்காக தன்னிடம் ஒப்படைக்குமாறு, இந்திய அரசும் கோரவில்லை. சி.ஐ.ஏ. க்கும், தெற்காசிய நாடுகளில் இயங்கும் ஜிகாதி இயக்கங்களுக்கும் இடையிலான இரகசிய உறவு தெரிந்து விடும் என்பதற்காக, அமெரிக்காவும் ஒத்துழைக்கவில்லை.

தெற்காசியாவிலேயே முதலாவது ஜிகாதி தீவிரவாத இயக்கத்தை யார், எப்போது, எங்கே உருவாக்கினார்கள் என்று தெரியுமா? ஆப்கானிஸ்தானில் 1969 ம் ஆண்டு, சி.ஐ.ஏ. நிதியுதவியில் அவை ஸ்தாபிக்கப் பட்டன. அந்தக் காலத்தில் ஆப்கானிஸ்தானை ஆண்ட, முற்போக்கான சிந்தனை கொண்ட  மன்னர் சாஹிர் ஷா, அயல் நாடான சோவியத் யூனியனின் உதவியுடன் தனது நாட்டை நவீனப் படுத்தி வந்தார். ஆப்கானிஸ்தானின் முதலாவது நெடுஞ்சாலையை கூட, சோவியத் என்ஜினியர்கள் தான் போட்டுக் கொடுத்தார்கள். அப்போது பனிப்போர் காலகட்டம் ஆகையினால், அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் சோவியத் செல்வாக்கு உயர்வதை தடுப்பதற்கு விரும்பியது.

ஹெக்மதியார், ரபானி போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், காபுல் பல்கலைக்கழத்தில் சட்டவிரோதமான "இஸ்லாமிய மாணவர் அமைப்பை" உருவாக்கினார்கள். 1973 ம் ஆண்டு, ஒரு சதிப்புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, ஆப்கானிஸ்தான் குடியரசானது. அந்த சந்தர்ப்பத்தில், பாகிஸ்தானுக்கு தப்பியோடிய ஹெக்மதியாரும், ரபானியும் ஆயுதமேந்திய இஸ்லாமிய போராளிக் குழுக்களை உருவாக்கினார்கள். அது தான் ஜிகாதிக் குழுக்களின் தோற்றம் ஆகும். ஆப்கானிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர விரும்பிய தீவிரவாத இயக்கங்களுக்கு, சி.ஐ.ஏ. வேண்டியளவு நிதியும், ஆயுதங்களும் வழங்கியது.

இதிலே கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு.  1979 ம் ஆண்டு, சோவியத் படையெடுப்புகளுக்கு பின்னர் தான், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் தோன்றின என்று நினைப்பது தவறு. உண்மையில், அன்றிருந்த ஆப்கான் அரசு கம்யூனிசத்துடன் எந்த தொடர்பும் இல்லாத மன்னராட்சியாக இருந்த போதிலும், சோவியத் உதவியுடன் நாட்டை நவீனமயப் படுத்தியதால் வந்த வினை அது. ஒரு நாடு சோஷலிச நாடாக இல்லாவிட்டாலும், அது சோவியத் முகாமில் கூட்டுச் சேர்வதையும், அதன் உதவியுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதையும் கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதே போன்ற காரணங்களுக்காக, இலங்கையில் பண்டாரநாயக்கவும்,  இந்தியாவில் இந்திரா காந்தியும் கொலை செய்யப் பட்டனர். இந்த அரசியல் படுகொலைகளுக்கு பின்னணியில் சி.ஐ.ஏ. யின் கரங்கள் மறைந்திருக்கலாம். ஒரு காலத்தில் இந்தியாவை கலக்கிக் கொண்டிருந்த, பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளும், காஷ்மீர் இஸ்லாமிய தீவிரவாதிகளும், சி.ஐ.ஏ. தொடர்பில் இருந்தமை ஒன்றும் இரகசியமல்ல.

விஸ்வரூபம் படத்தின் இறுதியில், "அமெரிக்காவை பேரழிவில் இருந்து காப்பாற்றிய கமல்ஹாசனை, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்கு அழைத்து பாராட்டுவதாக" ஒரு காட்சியை, அவரால் அமைக்க முடியவில்லை. அந்தளவு தூரம் கமல்ஹாசனின் கற்பனைக் குதிரை பாயவில்லை. ஆனால், அவர் திரைப்படத்தில் யாரை வில்லன்களாக சித்தரித்தாரோ, அந்த சினிமா வில்லன்கள் நிஜத்தில் நாயகர்களாக இருந்த விடயம் கமலுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இன்றைய அடிமை இந்தியர்களை விட, அன்றைய "விடுதலைப் போராளிகளான" ஆப்கான் ஜிகாதிகள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அந்த உறவு எந்தளவுக்கு நெருக்கமாக இருந்தது என்றால், 1982 ம் ஆண்டு, அமெரிக்க விண்வெளிக்கு செலுத்திய கொலம்பியா  விண்கலத்தை "ஆப்கான் விடுதலைப் போராளிகளுக்கு"(ஜிகாதிகளுக்கு) அர்ப்பணம் செய்யும் அளவிற்கு இருந்தது.

அது மட்டுமல்ல, அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், தாலிபான் போன்று உடையணிந்த ஜிகாதி தலைவர்களை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து உரையாடினார். 1985 ம் ஆண்டு நடந்த சந்திப்பின் போது, "இவர்கள் அமெரிக்க தேசத்தை நிர்மாணித்த சிற்பிகள் போன்றவர்கள்." என்று, ரீகன் ஜிகாதிகளை சுட்டிக் காட்டி,  புகழாரம் சூட்டினார். விஸ்வரூபம் படமெடுத்து, இந்தியரின் அமெரிக்க விசுவாசத்தை பறைசாற்றிய கமல்ஹாசனுக்கு அந்தப் பெருமை கிடைக்கவில்லை. இதை எல்லாம் கேள்விப் படும் பொழுது, கமல்ஹாசனும், அவரது இரசிகர்களும், தாலிபான் ஜிகாதிகள் மேல் பொறாமை கொள்வார்கள்.  என்ன செய்வது? சிலநேரம், உண்மைச் சம்பவங்கள் கற்பனைக் கதைகளை விட ஆச்சரியமாக இருக்கலாம். 

அமெரிக்க அரசு, ஆப்கான் ஜிகாதிகளுக்கு எவ்வளவு பணம் செலவளித்திருக்கும்? ஒரு தடவை மூச்சை இழுத்து பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். 1885 ம் ஆண்டு மட்டும், 280 மில்லியன் டாலர்களை சி.ஐ.ஏ. செலவிட்டது. சவூதி அரேபியா, மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் வழங்கிய தொகையை கணக்கிட்டால், அந்த வருடத்தில் மட்டும் 500 மில்லியன் டாலர்கள் ஜிகாதி இயக்கங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மை இவ்வாறு இருக்கையில், (சவூதி) அரேபியர்களை மட்டும் தாலிபானுக்கு நிதி கொடுக்கும் புரவலர்களாக, விஸ்வரூபம் படத்தில் கமல் காட்டியிருப்பார். கமல்ஹாசன் அவர்களே! உங்கள் தாய்நாடான இந்தியா, தொன்னூறுகளில் இருந்து தான் அமெரிக்காவின் அடிமை நாடாகியது. அதற்கு முன்பிருந்தே, சவூதி அரேபியா எப்போதும் அமெரிக்காவின் அடிமை நாடு தான். எண்ணை ஏற்றுமதி மூலம் பெரும் பணம் சம்பாதித்தாலும், அமெரிக்க எஜமானர்கள்  அந்தப் பணத்தை எங்கே, எப்படி செலவளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.  

1991 ம் ஆண்டு, குவைத்தை மீட்பதற்கு அமெரிக்கா படையெடுத்தது. ஆனால், அந்த செலவை சவூதி அரேபியா பொறுப்பேற்றது. அதே போல, ஆப்கான் ஜிகாதிகளை ஆதரிக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டது. சவூதி அரேபியா நிறைவேற்றியது.  இன்னமும் ஒன்றும் புரியவில்லை என்பவர்களுக்காக சுருக்கமாக சொல்கிறேன். உலகிலேயே அதிகளவு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி அரேபியா. சவூதி எண்ணையில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு விற்பனையாகின்றது. இதனால் பெருமளவு அமெரிக்க டாலர்கள், இலாபமாக சவூதி அரேபியாவின் கஜானாவை நிரப்புகின்றன. அந்தப் பணத்தில் ஒரு பகுதி, ஆப்கானிஸ்தானில் போராடும் ஜிகாதி இயக்கங்களுக்கும், தாலிபானுக்கும் சவூதி நிதியாக போய்ச் சேர்கின்றது. அந்தப் பணத்தைக் கொண்டு, ஜிகாதி இயக்கங்கள் அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்குகின்றன. இப்போது பணம் எங்கே போகின்றது? அப்பாடா... அமெரிக்காவில் இருந்து சென்ற டொலர்கள், ஒரு வழியாக அமெரிக்காவுக்கே திரும்பி வந்து விட்டன. 

(தொடரும்)

ஆப்கான் ஜிகாதிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம்:


President Ronald Reagan Meeting Some Mujahideen


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
3.அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"
4.அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம்

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

1 comment:

veligalukkuappaal said...

இது விஸ்வரூபம் விமர்சனம் அல்ல...

http://saambaldhesam.blogspot.in/2013/02/blog-post.html

மேற்கண்ட எனது வலைப்பூவில் விமர்சனத்தை(?)காண்க.