Tuesday, May 28, 2013

பொலிஸ் படையை விரட்டியடித்த இத்தாலி மாணவர்கள்


(Bologna, 27 May 2013)
இலங்கையிலும், இந்தியாவிலும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு,  இந்த செய்திக் குறிப்பு பெரிதும் பயன்படும். மக்களை அணிதிரட்டி போராடும் சமூக ஆர்வலர்களும், இத்தாலி மாணவர்களிடம் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்ளலாம். மக்கள் ஒன்று திரண்டு போராடினால், பெரும் பொலிஸ் படையை கூட விரட்டியடிக்கலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவை கவனமாகப் பாருங்கள். ஒருவரோடு ஒருவர் கை கோர்த்துக் கொண்டு போராடும் மாணவர்கள், பொல்லுகளுடன் தாக்கக் காத்திருக்கும் கலவரத் தடுப்பு பொலிசாரை, துணிச்சலுடன்  எதிர்த்து நின்று  போராடுகின்றார்கள். இறுதியில், மாணவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத பொலிஸ் படை, தலை தெறிக்க ஓடுகின்றது. அந்தக் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக வீடியோவில் பதிவாகியுள்ளன.

இத்தாலி நாட்டில், பொலோய்னா (Bologna) நகர பல்கலைக்கழக மாணவர்கள், ஒரு மாற்றுப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சுதந்திர பொது பல்கலைக்கழகம் (Collettivo Universitario Autonomo) என்று அதற்கு பெயரிட்டுள்ளனர். குறிப்பாக இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களால் உருவாக்கப் பட்ட  மக்களுக்கு இத்தாலியின் பொருளாதார பிரச்சினை பற்றிய அறிவு புகட்டுவது, அந்த கல்வி நிலையத்தின் குறிக்கோள். முழுக்க முழுக்க மாணவர்களால் நிர்வாகிக்கப் படும் சுயாதீனமான கல்லூரி, பொலோய்னா நகர மத்தியில் பேரவையை கூட்டியிருந்தது.



பொலோய்னா நகர மத்தியில் கூடிய பேரவையில், ஆயிரக் கணக்கான பொலோய்னா பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றினார்கள். அவர்களுடன் ஆர்வமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரும் கலந்து கொண்டனர். இத்தாலி எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்தின் மானியக் குறைப்பு, பல்கலைக்கழகத்தினுள் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள், போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டன.

உலகில் எந்த அரசாங்கமும், நிர்வாகக் கட்டமைப்புக்கு மாறான எந்தவொரு நிறுவனத்தையும் அடக்குவதற்கு பின்னிற்பதில்லை. அந்த வகையில், மாணவர்களின் மாற்றுப் பல்கலைக்கழகத்தை ஒடுக்கி முறியடிக்கும் நோக்குடன், போலிஸ் படை கொண்டு வந்து குவிக்கப் பட்டது. Piazza Verdi என்ற பல்கலைக்கழக முன்றலில், மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டத்தை அடக்க முனைந்த போலிசின் நோக்கம் நிறைவேறாதது மட்டுமல்ல, இறுதியில் அவர்களே அவ்விடத்தை விட்டு ஓடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை, இத்தாலி மாணவர்களின் போராட்டம் உணர்த்தி நிற்கின்றது.



No comments: