Sunday, April 06, 2014

நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய ஜெர்மன் கம்யூனிச அகதிகள்


ஜெர்மனியின் எல்லையோரம் அமைந்துள்ள, நெதர்லாந்து நாட்டின் வட மாகாணமான குரோனிங்கன், கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக திகழ்ந்தது. நெதர்லாந்து நாஸிகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த காலத்தில், முதன்முதலாக நாஸி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். முதன்முதலாக, யூதர்களின் உரிமை மறுப்புக்கு எதிராக, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராக போராடியவர்களும், கம்யூனிஸ்டுகள் தான். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது. பல நூறு டச்சுக் கம்யூனிஸ்டுகள், யூதர்களைப் போன்று தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டனர். பலர் அங்கிருந்து உயிருடன் திரும்பி வரவில்லை.

இந்த தகவல்கள் எல்லாம், இதனை வாசிக்கும் உங்களுக்கு புதிதாக இருப்பதைப் போன்று தான், பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது. எழுபதாண்டு காலமாக, இருட்டடிப்பு செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளின் நாசிஸ எதிர்ப்பு போராட்டம் பற்றிய தகவல்களை தாங்கிய நூல் ஒன்று இந்த வாரம் வெளியாகியுள்ளது. நூல் பற்றிய விமர்சனங்கள், நெதர்லாந்து வானொலி, தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருகின்றன.

"Het communistische verzet in Groningen" (குரோனிங்கனில் நடந்த கம்யூனிச கிளர்ச்சி) என்ற தலைப்பிலான நூல், இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஸி ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்டுகள் பற்றிய விபரங்களை பதிவு செய்துள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பலரின் பேட்டிகள், ஆவணங்கள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. நெதர்லாந்தில் கடந்த பல தசாப்த காலமாக ஜனநாயக ஆட்சி நடந்த போதிலும், யாராலும் இப்படி ஒரு ஆய்வு நூலை எழுத முடியவில்லை. ஒரு நூல் கூட எழுத முடியவில்லை என்றால், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நெதர்லாந்து ஜனநாயக அரசின் அடக்குமுறை, எந்தளவு நுணுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

1933 ம் ஆண்டு, அயல் நாடான ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், நாஸி அரசாங்கம் செய்த முதல் வேலை, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) யை தடை செய்தது தான். அதனால், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், எல்லை தாண்டி நெதர்லாந்திற்குள் நுழைந்து, அகதியாக அரசியல் தஞ்சம் கோரினார்கள். நெதர்லாந்து அரசு, அந்த அகதிகள் கம்யூனிஸ்டுகள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை வரவேற்கவில்லை. அதற்கு மாறாக, வேண்டாத விருந்தாளிகளாக புறக்கணித்தது. "தேசப் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கக் கூடிய, ஆபத்தான பேர்வழிகளுக்கு, எமது நாட்டிற்குள் புகலிடம் அளிக்க முடியாது..." என்று நெதர்லாந்து அரசு வெளிப்படையாகவே அறிவித்தது.

நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (CPN)யும், அதனோடு சேர்ந்த தொழிற்சங்கமும் இணைந்து, Roode Hulp (செம் உதவி)என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தன. அதன் பெயரில் டச்சு மக்களிடம் நிதி திரட்டி, ஜெர்மன் கம்யூனிச அகதிகளுக்கு உதவியது. அந்த உதவி சில வருடங்களே நீடித்தது. 1941 ம் ஆண்டு, நாஸி இராணுவம் நெதர்லாந்து மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அதனால், டச்சு கம்யூனிஸ்டுகளும் நாஸி அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. டச்சு கம்யூனிஸ்டுகளின் முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையாக, ஒரு சட்டவிரோத பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டனர். "Noorderlicht" (வடக்கத்திய வெளிச்சம்) என்ற நாஸி எதிர்ப்பு பத்திரிகை, பொது மக்கள் மத்தியில் விரும்பி வாசிக்கப் பட்டது.

1941 ம் ஆண்டு, நாஜி ஆக்கிரமிப்புப் படையினர், ஆம்ஸ்டர்டாம் நகரை சுற்றி வளைத்து தேடி, நானூறு யூதர்களை கைது செய்து கொண்டு சென்றனர். யூதர்கள் கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி பொது வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அன்று நடந்த வேலை நிறுத்தம், ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப் படுகின்றது.

1941 பெப்ரவரி வேலை நிறுத்தத்தின் நினைவாக கட்டப்பட்ட தொழிலாளியின் சிலை.
வேலைநிறுத்தப் போராட்டத்தினால், நாஜிகளின் யூத எதிர்ப்பு நடவடிக்கையை தடுக்க முடியா விட்டாலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு சான்றாக விளங்கியது. நெதர்லாந்தை நாஜிகள் ஆக்கிரமித்த காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்தது. கட்சி தலைமறைவாக இயங்கிய போதிலும், பெருமளவு மக்கள் ஆதரவு இருந்ததால், நாஜி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. தொழிற்சங்க நடவடிக்கை மட்டுமல்ல, ஆயுதப் போராட்டமும் கம்யூனிஸ்டுகளின் வழிநடத்தலின் கீழ் நடந்தது.

இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டாலும், சில வருடங்களுக்குப் பின்னர், பனிப்போர் ஆரம்பமாகியது. முன்பு ஜெர்மனியர்கள் மேலிருந்த வெறுப்பு, பின்னர் ரஷ்யர்களுக்கு எதிராக திரும்பியது. "(சோவியத்)ரஷ்யர்கள் படையெடுப்பார்கள்..." என்று நெதர்லாந்து அரசு, அடிக்கடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. உள்நாட்டில் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக காட்டியது. 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நாஸி ஆட்சியில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த டச்சுக் கம்யூனிஸ்டுகள், ஜனநாயக ஆட்சியிலும் ஒடுக்கப் பட்டனர். நெதர்லாந்தின் புதிய ஜனநாயக ஆட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகளின் உயிரை வாங்கவில்லை. ஆனால், அவர்களை ஏறக்குறைய நடைப்பிணம் ஆக்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழில் வாய்ப்புக் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. பலருக்கு அரசின் சமூகநல கொடுப்பனவுகள் கூட மறுக்கப் பட்டன.



நெதர்லாந்து கம்யூனிஸ்டுகளின் போராட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய Het communistische verzet in Groningen நூலை வாங்குவதற்கு: 

கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை அங்கீகரிப்பது பற்றி, உள்ளூர் தொலைக்காட்சி தயாரித்தளித்த நிகழ்ச்சி: 

No comments: