Thursday, December 18, 2014

"யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்


இது முற்போக்கு டச்சு இணையத் தளம் ஒன்றில் (http://onsfundament.nl/het-komt-allemaal-door-de-buitenlanders/) பிரசுரமான, மிகவும் அருமையான கட்டுரை.

ஐரோப்பாவில், குறிப்பாக நெதர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பரவிவருகின்றது. பூர்வீக வெள்ளையின மக்கள், தங்களது பொருளாதார பிரச்சினைகளுக்கு, வெளிநாட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்யும் கட்டுரை இது.

நாம் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கியது. இதை வாசிக்கும் தமிழர்கள், நெதர்லாந்து அல்லது ஐரோப்பாவின் யதார்த்த நிலைமையை புரிந்து கொள்வார்கள். அங்கு வாழும் மக்களின் மனோநிலையை உணர்ந்து கொள்வார்கள்.

இந்தக் கட்டுரை பூர்வீக டச்சுக்காரர்களை நோக்கி எழுதப் பட்டாலும், வர்க்க உணர்வற்ற தமிழர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஆகையினால், தமிழ் பேசும் மக்களுக்காக அதனை மொழிபெயர்த்து தருகிறேன்:
________________________________________________________________________________


 எல்லாவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் தான் காரணம்! 

அடிக்கடி என்ன கேள்விப் படுகின்றீர்கள்? நெதர்லாந்தில் எல்லாமே பிழையாக நடக்கிறது. அதற்குக் காரணம் வெளிநாட்டவர்கள்.


  • அகதிகள்: "சொந்த மக்களுக்கு" உதவி செய்ய வேண்டிய அரசாங்கம், அகதிகளுக்காக பணத்தை செலவளிக்கின்றது. 
  • முஸ்லிம்கள் : அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள். எங்கள் மேல் இஸ்லாத்தை திணிக்கப் பார்க்கிறார்கள். 
  •  மொரோக்கோ குடியேறிகள்: திருட மட்டுமே தெரிந்த வேலை செய்யாத சோம்பேறிகள். 
  • கிழக்கு ஐரோப்பியர்கள்: எங்களது தொழில் வாய்ப்புகளை பறிக்கிறார்கள்.


சிலநேரம், இதை வாசிக்கும் நீங்களும் இப்படி எல்லாம் நினைத்திருப்பீர்கள். மிகவும் நன்றி. இப்படியான கதைகளை பரப்புவதன் மூலம், மக்களை ஒடுக்கி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கு உதவுகின்றீர்கள்.

அகதிகளின் வருகையினால் தான், சுகாதாரப் பணியகங்கள் மூடப் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை இழுத்து மூடி விட்டால், சுகாதார சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப் படுமா? எதற்காக மக்கள் தங்கள் வீடு, வாசல்களை துறந்து வெளியேறுகின்றார்கள் என்று ஒரு நிமிடமேனும் நினைத்துப் பார்த்தீர்களா? சிலநேரம், அவர்கள் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், குண்டு வீச்சினால் பாதிக்கப் பட்டிருக்கலாம், அல்லது கைது செய்வதற்காக தேடப் படலாம். எமது அரசாங்கம் அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை விரும்புகின்றது.

நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?  மக்டொனால்ட்ஸ் முதல் சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வரை. ஏன் எங்கள் தேசத்தின் மேலான அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து எந்தக் கவலையுமற்று இருக்கிறீர்கள்? அமெரிக்கா ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டான நாடு என்ற பிரச்சாரத்தை இன்னமும் நம்புகிறீர்களா? அந்த நாடு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது மட்டுமல்லாது, நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக அதே பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்கின்றது.

எங்களது நாட்டில் குறைந்தளவு மொரோக்கோ குடியேறிகள் இருந்திருந்தால், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்புகள், இவை எல்லாம் மறைந்து விடுமா? தொழிலகங்களில் வழமைக்கு மாறாக அதிக வேலை வாங்கப் படுவதற்கும், அரசு கொடுக்கும் சமூகநல உதவித்தொகை போதாமல் இருப்பதற்கும், "அந்த" மொரோக்கோ காரர்கள் தான் காரணமா? உண்மையில் யார் யாரிடம் இருந்து திருடுகிறார்கள்? உங்களிடம் இருந்து திருடும் அதே மேட்டுக்குடி வர்க்கம் தான், மொரோக்கோ காரர்களிடமும் இருந்து திருடுகின்றது.

"அந்த" கிழக்கு ஐரோப்பியர்களினால் தான், உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை மூடி விட்டால், உங்களுக்கு ஒரு நிரந்தர வேலைக்கான ஒப்பந்தம் கிடைக்குமா? பார ஊர்திகளின் (லொறி) முதலாளிகளும், ஷெல் போன்ற நிறுவனங்களும், ஐரோப்பாவில் மலிவு விலை கூலிகளை தேடிப் போவது, கிழக்கு ஐரோப்பிய மக்களின் குற்றமா? ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் இயற்றுவதற்கு கிழக்கு ஐரோப்பியர்கள் தான் காரணமா? நீங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க வழியில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சிலநேரம், இந்த நாட்டில் எல்லாமே பிழையாக நடப்பதற்கு எங்கள் மேல் தவறு இருக்கலாம். எங்களது தவறு? ஆமாம், எங்களது தவறு தான். ஏனென்றால், இந்த நாட்டில் வாழும் நாங்கள் தெளிவாக சிந்திப்பதில்லை. இங்கே என்ன நடக்கிறது, அது ஏன் நடக்கிறது என்று அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே வர்க்கத்தை, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை அறியாமல் இருக்கிறோம்.

உலகம் முழுவதும் தங்கள் இருப்பிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள், பணத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறோம். ஏனென்றால், தோல்நிறம், பூர்வீகம், மதம் போன்ற வித்தியாசங்களை பெரிதென எண்ணி, எங்களை நாங்களே பிரித்துக் கொள்கிறோம். எங்களுடைய பணம் எந்த வர்க்கத்திடம் போய்ச் சேருகின்றது என்ற உண்மையை அறியாதிருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை பற்றி அறியாதிருக்கிறோம்.

எங்களை விட வித்தியாசமாக தோன்றும் மனிதர்கள் மேல் சீறிப் பாய்வது மிகவும் இலகுவானது. ஏனென்றால், முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி கொள்வதும், அவர்களது அரசியல் அமைப்பை எதிர்ப்பதும், "நெதர்லாந்து பண்பாடு" அல்ல! அப்படித் தானே? முன்னாள் லிபரல் கட்சிக்காரரும், இந்நாள் "கார்ப்பரேட்களுக்கான கட்சி"(PVV) நடத்துபவருமான ஒருவர், அமெரிக்க, இஸ்ரேலிய கோடீஸ்வரர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு நெதர்லாந்தை நாசமாக்குவதற்கு உதவுகிறார். அவர் சொல்லும் கதைகளை கேட்டு ஏமாறுகிறோம். 

இந்த பொம்மைகள், தொழிலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் பக்கம் நிற்பதாக நினைக்கிறீர்களா? அவர்கள் தான் (பூர்வீக) நெதர்லாந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இனிப்பாகப் பேசுகிறவர்களை நம்புகிறீர்களா? வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்பு போன்ற திட்டங்களுக்கு, பாராளுமன்றத்தில் அவர்களும் தான் சம்மதிக்கிறார்கள். (உழைக்கும் வர்க்கம்) பிரிந்திருப்பதால் பலவீனமாகப் போகிறோம் என்பதை நீங்கள் உணரவில்லையா?

இன்னும் உணரவே இல்லை? அப்படியானால், தங்களது நிதி வழங்குநர்கள் முன்னேற வேண்டுமென்பதற்காக, இந்த சமூகத்தை இன்னும் விரைவாக உடைக்கும் நபர்களை பற்றியும் முறைப்பாடு செய்ய வராதீர்கள். ஏனென்றால், அவர்கள் அகதிகள், மொரோக்கோ காரர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள் ஆகியோரை மட்டுமல்ல, வேலை செய்யும் எல்லோரையும் பிடித்து அடக்குவார்கள். அதனை நீங்கள் பொறுத்திருந்து பார்ப்பீர்கள். 

தொழிற்சங்கம் ஒன்றின் மூலம் நிறுவனமயமாகும் ஒவ்வொருவரும், நல்லதொரு எதிர்காலத்திற்காக கிளர்ந்து எழும் ஒவ்வொருவரும் அடக்கப் படுவார்கள். ஒன்றில் வன்முறை மூலம், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை மூலம் இது நடக்கும். அதனால், அந்த நேரம் உங்களைப் பிடிக்க வந்தால், சிலநேரம் நீங்களும் தப்பி ஓட வேண்டி இருக்கும். அந்த நேரம், உங்களை ஒரு நாட்டில் அகதியாக வரவேற்பார்கள் என்று நம்புவோமாக...


(இது ஒரு மொழிபெயர்ப்பு. மூலக் கட்டுரையை வாசிப்பதற்கு: ‘Het komt allemaal door de buitenlanders’)

No comments: