Friday, January 30, 2015

கிரேக்க நாட்டில் இடதுசாரிப் பூகம்பம்! அதிர்ச்சியில் ஐரோப்பா!!


2015 ஜனவரி 25, கிரேக்க பொதுத் தேர்தலில் வென்ற சீரிசா (Syriza) பற்றி சில குறிப்புகள்:

Syriza என்ற பெயர் எப்படி வந்தது? SYnaspismós RIZospastikís Aristerás: தீவிர இடதுசாரிகளின் கூட்டணி என்ற பெயர் சுருங்கி சீரிசா ஆனது.

மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஒரு "தீவிர" இடதுசாரிக் கட்சி என்று அழைக்கின்றன. ஏனென்றால், மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சிகளை தான், இவ்வளவு காலமும் "இடதுசாரி" கட்சிகள் என்று கூறி வந்தனர். நம்மைப் பொறுத்தவரையில் அவை வழமையான முதலாளித்துவ கட்சிகள். அதனால், மேற்குலக ஊடகங்கள் படம் காட்டுவதற்கு மாறாக, சீரிசா ஒரு மிதவாத இடதுசாரிக் கட்சி என்று அழைப்பதே பொருத்தம்.

அதனை நாங்கள், புரட்சிகர கட்சி அல்லது திரிபுவாத கட்சி போன்ற வரையறைக்குள் அடக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனை ஒரு ஜனநாயகக் கட்சி என்று கூறலாம். பெரும்பான்மை கிரேக்க மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த இடதுசாரி சக்திகள் ஒன்று சேர்ந்து அதை உருவாக்கி இருந்தன. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்பது போல, ஜனநாயகம் பேசும் மேற்கத்திய நாடுகளை (குறிப்பாக: ஜெர்மனி போன்றநாடுகள்) அவர்களின் வழியில் சென்று கோரிக்கைகளை வைப்பது தான் நோக்கம்.

Syriza பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதற்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லோரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டுமே? புரட்சி எங்களது வீட்டுக் கதவை தட்டும் வரையில் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? Syriza தனது கடமையை செய்ய தவறினால், அல்லது தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தால், அதில் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) பதவியேற்றவுடன் முதல் வேலையாக, கிரேக்க புரட்சிக்காக போராடி மறைந்த கம்யூனிசப் போராளிகளின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் சாத்தினார். அலெக்சிஸ் சிப்ராஸ், முன்பு கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) இளைஞர் அணி உறுப்பினராக இருந்தவர்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், கிரீஸ் நாஸி ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. தலைமறைவாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, நாஸி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கெரில்லாப் போர் ஒன்றை நடத்தியது. கம்யூனிச கெரில்லாப் படைகள், பல இடங்களில் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி இருந்தன.

போரின் முடிவில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான, முன்னாள் நாஸி ஆதரவு கிரேக்க ஒட்டுக் குழுக்களுக்கு உதவினார்கள். 1946–49 காலப் பகுதியில், மீண்டும் வெடித்த உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்டுகள் தோற்கடிக்கப் பட்டனர். அன்று நடந்த போரில், வீர மரணத்தை தழுவிக் கொண்ட, பல்லாயிரக் கணக்கான போராளிகளின் நினைவு ஸ்தூபி, ஏதென்ஸ் நகரில் வைக்கப் பட்டுள்ளது.

ஒரு முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் கட்சியை, பொதுத் தேர்தலில் வெல்ல வைத்த, கிரேக்க வாக்காளர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்:


GREECE: THE END OF AUSTERITY? from Theopi Skarlatos on Vimeo.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !
கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்

No comments: