Thursday, April 09, 2015

மாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம்


சீனா ஒரு முதலாளித்துவ நாடான பின்னர், அங்கு பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மேற்கத்திய ஊடகங்களில் வெளிவருவதில்லை.

குவாங்டோங் (Guangdong) நகரில் உள்ள பொலிஸ் நிலையமும், பொலிஸ் கார்களும் மக்களால் அடித்து சேதப் படுத்தப் பட்டன. 

"சீனாவில் சுதந்திரம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது" என்றெல்லாம் எமக்குப் போதிக்கும் மேற்கத்திய ஊடகங்கள், இது போன்ற தகவல்களை தெரிவிக்காமல் மறைக்கும் காரணம் என்ன? தங்கள் நாட்டு மக்களும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சமா?


குவாங்டொங் நகர சபை அனுமதியுடன், அங்கு ஒரு கழிவுப் பொருட்களை எரிப்பதற்கான உலை (incinerator) கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தது. அயலில் உள்ள லங்க்தாங் (Langtang) நகர சபை "China Resources Cement Holdings" நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

குறிப்பாக, லங்க்தாங் நகரவாசிகள், தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மையாக, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆலை கட்டப் படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசடைய வைத்துள்ளது. அதற்கும் மேலாக புதிய உலை சூழலை இன்னும் அதிகமாக மாசு படுத்தும் என்று நம்பினார்கள்.


அயலில் உள்ள இன்னொரு நகரமான லுவோடிங் (Luoding) வாசிகள், உள்ளூர் பாடசாலைகளோடு சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் சீமெந்து ஆலை ஏற்கனவே தமது நீர் நிலைகளையும், வளிமண்டலத்தையும் மாசு படுத்தி விட்டதாக குறைப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை வந்தால், அதனால் தமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஏப்ரல் 6 ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அடக்குமுறை பிரயோகித்துள்ளது. கவச உடை அணிந்த பொலிஸ் படையினர், தடியடிப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், இருபது பேரை கைது செய்துமுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டத்தில், பொலிசார் வன்முறை பிரயோகித்த செயலானது பொது மக்களை ஆத்திரமடைய வைத்தது. பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் சிறுவர்களும் பாதிக்கப் பட்டனர்.

முதலாளிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள பொலிஸ் நடவடிக்கை, தமது நியாயமான போராட்டத்தை உதாசீனப் படுத்தியதை கண்டு பொறுக்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து, பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணில் கண்ட பொருட்களை அடித்து நிர்மூலமாக்கினார்கள்.

மக்கள் எழுச்சி காரணமாக, தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. இது மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப் பட வேண்டும்.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக, சீன சமூக வலைத் தளங்களில் பிரசுரமான படங்களை இங்கே இணைத்துள்ளேன்.




No comments: