Tuesday, December 06, 2016

எழுக தமிழுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரிகள், தமிழ் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்பு!


செப்டம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் நடந்த எழுக தமிழ் பேரணியில் சிங்கள இடதுசாரிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் த‌மிழ் மேடையில் தோன்றி மக்கள் முன் உரையாற்றியது ம‌ட்டும‌ல்லாது, கொழும்பு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து, எழுக‌ த‌மிழ் பேர‌ணியை தாம் ஆதரித்த‌மைக்கான‌ கார‌ண‌த்தை விளங்க‌ப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

இல‌ங்கையில் தின‌க்குர‌ல் ப‌த்திரிகையில் இந்தத் தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், இந்த‌த் த‌க‌வ‌லுக்கு த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்காத‌ கார‌ண‌ம் என்ன‌? த‌மிழ்த் தேசிய‌ ஊட‌க‌ங்க‌ள், இணைய‌த் த‌ள‌ங்க‌ள், பேஸ்புக் போராளிக‌ள் இதை இருட்ட‌டிப்பு செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

எழுக‌ த‌மிழ் பேர‌ணியை முன்நின்று ந‌ட‌த்திய‌ த‌மிழ் தேசிய‌ ம‌க்க‌ள் முன்ன‌ணி உறுப்பின‌ர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அடிக்க‌டி கேட்கும் கேள்வி இது: "(சிங்க‌ள‌) இட‌துசாரிக‌ள் எம‌க்காக‌ என்ன‌ செய்தார்க‌ள்?" சிங்க‌ள‌ இட‌துசாரிக‌ளுட‌ன் கூட்டுச் சேர்ந்து அர‌சிய‌ல் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள், யாரை ஏமாற்றுவ‌த‌ற்காக‌ இப்ப‌டிப் பொய் சொல்கிறார்க‌ள்? இட‌துசாரிக‌ளை திட்டினால் தான், முத‌லாளிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு நிதி கொடுப்பார்க‌ளா?

நவம்பர் 13 அன்று, யாழ் பொது நூலகத்தில் "தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது எப்படி?" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஐக்கிய சோஷலிசக் கட்சி பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய பிரதான உரையாற்றினார். அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி பொதுச் செயலாளர் சி.க.செந்தில்வேல் உரையாற்றினார். இந்த இரண்டு கட்சிகளும் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமைக்கு ஆதவாக பேசி வருகின்றன.


ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற "சிங்கள" இடதுசாரிகள் வெளியிடும் செந்தாரகை பத்திரிகையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் கட்டுரைகள் வெளியாவதுண்டு. இடதுசாரிகளுக்குள் சிங்கள, தமிழ் பேதம் கிடையாது. அந்தக் கட்சியை ஸ்தாபித்த்வர்களில் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழர் என்பது மட்டுமல்ல, நிறைய தமிழர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர், இது போன்ற விடயங்களை தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்து வருவதேன்? "சிங்கள" இடதுசாரிகளும் தம்மை ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை, தமிழ் மக்களுக்கு சொல்ல மறுப்பதேன்? முதலாளிகளிடம் இருந்து பணம் கிடைக்காது என்ற சுயநலப் புத்தி தான் காரணமா?

ஈழத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி கம்யூனிஸ்டுகள் பேசி வந்த போதெல்லாம், தமிழ்த் தேசியவாதிகள் அதை நிராகரித்து நையாண்டி செய்தனர். "ஆண்ட பரம்பரைத் தமிழர்கள், இழந்த தேசத்தை கோருகிறார்கள்... சுயநிர்ணயத்தை அல்ல..." என்று அதற்கு விளக்கம் கூறினார்கள்.

தற்போது, அதாவது 2009 க்குப் பின்னர், அதே தமிழ்த் தேசியவாதிகள் சுயநிர்ணய உரிமை பற்றி பேசும் முரண்நகையை அவதானிக்கலாம். குருவை மிஞ்சிய சிஷ்யன் மாதிரி, தமக்கு சுயநிர்ணய உரிமை பற்றி போதித்த கம்யூனிஸ்டுகளுக்கே அது பற்றிப் பாடம் நடத்தும் வேடிக்கையையும் அவதானிக்கலாம்.

அவர்களிடம் யாரும் சுயநிர்ணய உரிமைக்கு விளக்கம் கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது. தனிநாடு என்பதற்கு ஒத்த கருத்துச் சொல் என்று தான், அவர்களில் பலர் நினைத்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பார்கள். மலையகத் தமிழரின் சுயநிர்ணயத்தை கண்டுகொள்ள மாட்டார்கள்.

இன்னும் சில தமிழ்த் தேசிய "அறிவுஜீவிகள்" இருக்கிறார்கள். "லெனின் அப்படிச் சொன்னார்..." என்று தொடங்கி விரிவுரை ஆற்றுவார்கள். லெனின் சுயநிர்ணயம் பற்றி எழுதிய குறிப்புகளில், "தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை காரணமாக, சோஷலிச நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவது" பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

கம்யூனிசத்தை எதிர்ப்பதை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டவர்கள் லெனினை மேற்கோள் காட்டும் முரண்நகையை காணலாம். இன்று எத்தனை தமிழ்த் தேசியவாதிகள் மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள்? தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சோஷலிசத்திற்கான போராட்டத்தையும் ஒரே குறிக்கோள் கொண்ட நட்பு சக்திகளாக பார்க்கிறார்கள்?

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியுடன், கம்யூனிஸ்டுகள் ஐக்கிய முன்னணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் முன்வைக்கப் பட்ட பல நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஏகாதிபத்திய எதிர்ப்பு" என்ற வார்த்தையை கண்டவுடனேயே பின்வாங்கி விட்டார்கள்.

இவர்கள் ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டு, மறுபக்கம் கம்யூனிஸ்டுகள் எம்முடன் வந்து சேரவில்லை என்று இன்றைக்கும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலாவது குறைந்த பட்ச புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. தம்மை கம்யூனிச எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்வதில் பிரியப் படுவோர் அநேகம். அடிமைகளாக வாழ்வதில் சுகம் காண்பவர்கள் விடுதலை பற்றிப் பேச அருகதை அற்றவர்கள்.

No comments: